ADVERTISEMENT

துபாய்: சாலை நடுவே ஸ்டண்ட் செய்து வைரலான நபர்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம் விதித்து கைது செய்த காவல்துறை..

Published: 27 Jul 2024, 8:25 PM |
Updated: 27 Jul 2024, 8:34 PM |
Posted By: admin

அமீரகத்தை பொறுத்தவரை வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாக இருந்து வருகிறது. இத்தகைய செயல்கள் புரியும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் கைது செய்வதுடன் கடும் அபராதமும் விதித்து எச்சரித்து வருகின்றனர். இருந்தபோதிலும் அவ்வப்போது வாகனங்களில் ஸ்டண்ட் செய்து காவல்துறையிடம் மாட்டிக்கொள்ளும் சம்பவமும் நடப்பதுண்டு.

ADVERTISEMENT

அந்த வகையில் பொறுப்பற்ற முறையில் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஓட்டுநரை துபாய் காவல்துறை கைது செய்துள்ளது. அத்துடன் ஸ்டண்ட் செய்த வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து, அதை விடுவிக்க 50,000 திர்ஹம்ஸ் கட்டணமாக விதித்துள்ளனர்.

 

ADVERTISEMENT

அவர் நிகழ்த்திய ஸ்டண்ட்களில் ஒரு ரவுண்டானாவில் செல்லும்போது காரை இரு சக்கரங்களில் மட்டுமே ஓட்டுவதும் டிரிஃப்டிங் (drifting) செய்வதும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து வாகன ஓட்டி உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக போக்குவரத்து பொதுத் துறையின் துணை இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பொதுவாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மத்திய போக்குவரத்துச் சட்டத்தின்படி கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதற்கான அபராதங்கள் மாறுபடும். மேலும் துபாயில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சிகப்பு சிக்னலின் போது நிற்காமல் செல்லுதல் ஆகியவை கடுமையான போக்குவரத்து குற்றங்களில் ஒன்றாகும், இந்த குற்றங்களுக்காக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் முன் வாகன ஓட்டிகள் 50,000 திர்ஹம் அபராதம் செலுத்த வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் குற்றம் நடந்த நாளிலிருந்து ஒரு வருடத்திற்குள் கார் மீண்டும் பறிமுதல் செய்யப்பட்டால், வாகனத்தை விடுவிப்பதற்காக செலுத்த வேண்டிய தொகை இரட்டிப்பாகும். கடந்த ஆண்டு ஜூலையில் முதன்முதலில் செயல்படுத்தப்பட்ட துபாய் போக்குவரத்துச் சட்டத்தின்படி, அபராதத் தொகை 200,000 திர்ஹம்ஸை தாண்டாத வழக்குகளுக்கு இந்த விதி பொருந்தும்.

துபாய் காவல்துறை மேலும் தெரிவிக்கையில் உயிர்களுக்கு ஆபத்தை விளைவிப்பவர்கள் அல்லது சாலைகளை சேதப்படுத்துபவர்களுக்கு கடுமையான அபராதம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்வதன் மூலம் சட்டம் தண்டிக்கப்படுகிறது. அத்துடன் துபாய் போலீஸ் செயலியில் உள்ள ‘police eye’ சேவையின் மூலமாகவோ அல்லது ‘நாம் அனைவரும் போலீஸ் (We Are All Police)’ சேவையை 901 என்ற எண்ணில் தொடர்புகொள்வதன் மூலமாகவோ சாலைப் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel