அமீரகத்தில் கோடை விடுமுறை முடிவுக்கு வரும் பட்சத்தில் இந்த மாத இறுதியில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கின்றன. இந்த விடுமுறையை கழிக்க பலரும் சொந்த ஊர் அல்லது சுற்றுலா சென்றிருக்க, விடுமுறை முடியும் தருவாயில் இருப்பதால் இந்த கால கட்டத்தில் அமீரகத்தை நோக்கி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படும் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக உள்வரும் அமீரக விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்ற ஒரு தகவல் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியானது பொதுவாக பல ஐக்கிய அரபு அமீரக குடும்பங்கள் விடுமுறைகள் மற்றும் சொந்த நாட்டுக்கு சென்று திரும்பும் நேரமாகும். இதனால் விமானங்களுக்கு அதிகளவு தேவைகள் இருப்பதால் விமானக் கட்டணங்களில் அதிகளவு உயர்வுக்கு இது வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐக்கிய அரபு அமீரக பள்ளிகள் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளன என்பதால், அமீரகத்தில் குடும்பமாக வசித்து வருபவர்கள் வழக்கமாக சில நாட்களுக்கு முன்பே திரும்பத் திட்டமிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து துபாயில் உள்ள பயண முகவர்கள், மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள பல இடங்களில் இருந்து அமீரகத்திற்கு உள்வரும் விமானக் கட்டணங்கள் அதிகரிப்பதாகக் கூறியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள வழித்தடங்களில் விமானக் கட்டணங்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்ச பருவத்தில் சில வழித்தடங்களில் விமானக் கட்டணம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று பயண முகவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அமீரகத்தில் இயங்கி வரும் ஆன்லைன் பயண நிறுவனமான Musafir.com இன் செயல்பாட்டுத் துணைத் தலைவர் ரஷிதா ஜாஹித் கூறுகையில், “ஆகஸ்ட் மாத பள்ளி திறப்பு வரை அமீரகத்திற்கு வரும் விமானங்களுக்கான கட்டணங்களானது, அமீரகத்திற்கு திரும்பும் வெளிநாட்டவர் குடும்பங்களின் வருகையால் முதன்மையாக இயக்கப்படுகிறது. குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் புதிய கல்வியாண்டிற்குத் திரும்பத் தயாராகும் போது, விமானங்களுக்கான தேவை விண்ணை முட்டும்” என கூறியுள்ளார்.
இந்த உச்ச பயணக் காலங்களில் அதிகரித்த தேவை மற்றும் குறைந்த அளவிலான விமான சேவையாக இருப்பதால் இதனை தவிர்க்க முடியாமல் டிக்கெட் விலையை விமான நிறுவனம் உயர்த்துகிறது என கூறப்பட்டுள்ளது. அதிக தேவைக்கு ஏற்ப விமான நிறுவனங்கள் அடிக்கடி கட்டணங்களை மாற்றி அமைக்கின்றன என்றும், இதன் விளைவாக குறிப்பிடத்தக்க விலை உயர்வு ஏற்படுகிறது என்றும் கூறப்படுகின்றது.
ரஷிதா மேலும் கூறுகையில், “இந்த பயண காலங்களில் பல்வேறு பிராந்தியங்களில் விமான கட்டணங்கள் அதிகரிக்கும் போதிலும், இந்திய துணைக்கண்டம் மிகவும் வியத்தகு விலை உயர்வைக் காண்கிறது, நாடு திரும்பும் வெளிநாட்டினரின் பெருமளவிலான வருகையின் காரணமாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக கட்டணம் இரட்டிப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
தேரா டிராவல் அண்ட் டூரிஸ்ட் ஏஜென்சியின் பொது மேலாளர் டி.பி.சுதீஷ் கூறுகையில், “ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் தொடக்கம் வரை வரலாற்று ரீதியாக போக்குவரத்தின் உச்ச பருவமாகும். அத்துடன் கோடைகால சீசன் முடியவுள்ள நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணத்திற்கான தேவை அதிகமிருப்பதால், இந்தக் காலகட்டத்தில் விமானக் கட்டணம் உயரும்” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை விமானப் பயணத்திற்கான மிக அதிக தேவையைக் காணும் முக்கிய வழித்தடங்கள் என்றும் சுதீஷ் கூறியுள்ளார். மேலும் செப்டம்பரில் விமானக் கட்டணங்கள் மெதுவாக குறையும் உள்வரும் விமானக் கட்டணம் மெதுவாகக் குறையும் என்று சுதீஷ் கூறியுள்ளார். ரஷிதா ஜாஹித் கூறுகையில், “ஆகஸ்ட் மாத தொடக்க உச்சநிலைக்குப் பிறகு உள்வரும் அமீரக விமானக் கட்டணம் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து விமான கட்டணத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel