ஐக்கிய அரபு அமீரகமானது, ஈரான் தலைநகரான தெஹ்ரானில் உள்ள அதன் தூதரகத்தை மூடுவதாகவும், அதன் தூதரை திரும்பப் பெறுவதாகவும் வெளியுறவு அமைச்சக அறிக்கையில் அறிவித்துள்ளது.
இது குறித்து கூறுகையில் “ஐக்கிய அரபு அமீரக பிரதேசத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அப்பட்டமான ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ஈரானில் இருந்து அதன் அனைத்து தூதரக உறுப்பினர்களையும் நாடு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் “குடியிருப்பு பகுதிகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் தளங்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு” என்றும், அப்பாவி பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொறுப்பற்ற முறையில் இவ்வாறு நடந்துகொள்வது தேசிய இறையாண்மையை மீறுவதாகவும், சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தை தெளிவாக மீறுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தை மூடுவதற்கான முடிவு, அதன் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான நாட்டின் உறுதியான, அசைக்க முடியாத நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் “தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் ஆத்திரமூட்டும் அணுகுமுறை பதற்றத்தைக் குறைப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது மற்றும் பிராந்தியத்தை மிகவும் ஆபத்தான பாதைகளுக்குத் தள்ளுகிறது. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலகப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துகிறது” என்றும் ஐக்கிய அரபு அமீரக அமைச்சகம் தெரிவித்துள்ளது.