ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று முதல் ஈத் அல் ஃபித்ர் விடுமுறை தொடங்கிய நிலையில், துபாய் மெட்ரோ மற்றும் டிராம் ஆகியவற்றின் இயக்க நேரத்தை நீட்டித்துள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
RTA-வின்படி, துபாய் மெட்ரோ சேவையானது அதிகாலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், டிராம் சேவை காலை 6 மணி முதல் அதிகாலை 1 மணி வரையிலும் இயக்கப்படும். இந்த நீட்டிக்கப்பட்ட கால அட்டவணை மார்ச் 18 முதல் மார்ச் 22 வரை அமலில் இருக்கும் எனவும் RTA தெரிவித்துள்ளது.
வழக்கமாக, துபாய் மெட்ரோ திங்கள் முதல் வியாழன் வரையிலும் மற்றும் சனிக்கிழமைகளிலும் காலை 5 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இயக்கப்படும். அதுவே, வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஈத் பண்டிகையின் முதல் நாள் முதல் விடுமுறையின் மூன்றாம் நாள் இறுதி வரை, பல அடுக்கு வாகன நிறுத்துமிடங்களைத் தவிர துபாய் முழுவதும் உள்ள அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களுக்கும் பார்க்கிங் கட்டணம் இலவசம் என RTA முன்னதாக உறுதிப்படுத்தியது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel