மத்திய கிழக்கில் நிலவும் பிராந்தியப் போர் தற்போது ஐந்தாவது வாரத்தில் உள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) நாடுகளில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள், ஈரானிலிருந்து ஏவப்படும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் குரூஸ் ஏவுகணைகளுக்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய கிழக்கில் நடந்து வரும் போரில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாடு, அதன் இறையாண்மை, மக்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஒரு தற்காப்பு நிலைப்பாடாகவே உள்ளது என்றும், ஈரானிடமிருந்து தொடரும் சட்டவிரோத மற்றும் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் தற்காப்பு உரிமையை அது கொண்டுள்ளது என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர் தற்பொழுது உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் இந்த மோதலுக்கு மத்தியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறும் சமீபத்திய செய்திகள் தவறானவை என்றும் அவர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், உலகின் எரிசக்தி விநியோகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கணிசமான பங்கு கடந்து செல்லும் ஹோர்முஸ் நீரிணையை , உலகப் பொருளாதாரத்திற்கான ஒரு முக்கிய பகுதியாக நாடு கருதுவதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில் “இந்த நீர்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பரந்த சர்வதேச ஒருமித்த கருத்து உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழலில், கடல்சார் பாதுகாப்பைப் பேணுவதையும், வர்த்தகத்தின் தடையற்ற ஓட்டத்தை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட கூட்டு சர்வதேச முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அத்தகைய எந்தவொரு ஈடுபாடும் “சர்வதேசப் பங்காளிகளுடன் முழுமையான ஒருங்கிணைப்புடனும், சர்வதேசச் சட்டங்களைக் கண்டிப்பாகப் பின்பற்றியும்” நடத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையை எந்தவொரு நாடும் சீர்குலைக்கவோ அல்லது வற்புறுத்தவோ கூடாது, குறிப்பாக உலகப் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் சர்வதேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் அவ்வாறு செய்யக்கூடாது என்பதை ஐக்கிய அரபு அமீரகம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.