அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இன்று அதிகாலை முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருந்த நிலையிலும், லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேலின் இந்த போர் நிறுத்த மீறல் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் டேங்கர் போக்குவரத்து மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம் இன்று புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளிவந்துள்ள தகவல்களின் படி, இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு இணையாக எண்ணெய் டேங்கர்களின் போக்குவரத்து ஹோர்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனினும் இது குறித்த மேலதிக செயல்பாட்டு விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் பேரில், இரண்டு வார கால போர் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு எண்ணெய் டேங்கர்கள் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு மத்தியில் இன்று புதன்கிழமை மட்டும் பெய்ரூட், பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனான் ஆகிய பகுதிகளில் உள்ள பல இடங்களில் “10 நிமிடங்களுக்குள்” 100-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது. இது தற்போதைய தாக்குதல் தொடங்கியதிலிருந்து நடந்த “மிகப்பெரிய” ஒருங்கிணைந்த தாக்குதலாகும்.
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்காக தெஹ்ரான் “செயல்படுத்தக்கூடிய” 10 அம்ச முன்மொழிவை முன்வைத்ததாகக் கூறி, ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை டிரம்ப் இன்று அதிகாலை அறிவித்தார். மேலும் இந்த 10 அம்ச கோரிக்கையில் லெபனான் மீதான தாக்குதலும் நிறுத்தப்பட வேண்டும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel