அமீரக செய்திகள்

துபாய் : அனைத்து இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைக்கிறது குளோபல் வில்லேஜ் !!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் துபாயில் வருடந்தோறும் குளிர்காலங்களில் பெரும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது குளோபல் வில்லேஜ் எனும் பொழுது போக்கு தளம். உலகளவில் மிகப்பெரிய பொழுதுபோக்கு தளமாக விளங்கும் குளோபல் வில்லேஜில் உலகிலுள்ள 90 நாடுகளின் கலாச்சாரங்களை ஒன்றாக ஒரே இடத்தில் காணலாம். மேலும் அங்கு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

அமீரகத்தில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நிலையில் இருக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் குளோபல் வில்லேஜ் ஏப்ரல் மாதம் வரை செயல்பாட்டில் இருக்கும். ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கிலான மக்கள் இங்கு வந்து செல்கிறார்கள்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட குளோபல் வில்லேஜின் 24வது சீசனில் தற்பொழுது வரை பார்வையாளர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் இசைக்கச்சேரி நிகழ்ச்சியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், குளோபல் வில்லேஜில் “வெளிப்புற ஷாப்பிங், டைனிங் மற்றும் பொழுதுபோக்கு” ​​போன்ற சாதாரண செயல்பாடுகள் ஏப்ரல் 4 ஆம் தேதி சீசன் முடியும் வரை வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவிலான மக்கள் ஒரே இடத்தில கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இங்கு நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிகளானது அடுத்த சீசன் வரை ஒத்தி வைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் பாதிப்பால் அமீரகத்தில் பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு அல்லது ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து, அதிகளவில் மக்கள் கூடும் இடமான குளோபல் வில்லேஜிலும் கொரோனா வைரசிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இசை நிகழ்ச்சி இந்த சீசனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!