அமீரக செய்திகள்

கொரோனா பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம்.. அமீரக அரசு எச்சரிக்கை.. மீறினால் சிறை தண்டனை மற்றும் அபராதம்!!!

அமீரகத்தில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளை பரப்புவதற்கு எதிராக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகளையும் போலி தகவல்களையும் பரப்புபவர்களுக்கு ஆன்லைன் சட்டத்தின்படி தண்டனை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் (MoI-Minsitry of Interior) எச்சரித்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் பொறுப்புடன் செயல்படுமாறும் வலியுறுத்தியுள்ளது. ஆன்லைன் சட்டங்களை மீறுபவர்கள் மீது மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது 3 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்க நேரிடும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மிகைப்படுத்தும் விதமாக கூறப்படும் சில வதந்திகள் மூலம், மக்கள் மனதில் அச்சத்தையும் சமூகத்தின் உறுப்பினர்களிடையே தேவையற்ற பீதியையும் தூண்டுகிறார்கள் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த வாரம், அபுதாபியில் உள்ள சையத் பல்கலைக்கழகம், அங்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாக கூறப்பட்ட வதந்திகளை மறுத்ததோடு, மாணவர்களையும் ஊழியர்களையும் பொய்யுரைக்கும் மற்றும் பயமுறுத்தும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியது.

மேலும் இது போல கடந்த சில நாட்களாக அதிகளவில் கொரோனா வைரஸ் குறித்த வதந்திகள் பரவி வருவதைத் தொடர்ந்து அரசு, சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்கள் இதனை தடுப்பதற்கான முடிவெடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் அல்லது வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்களை பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, பொது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வழங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பற்றி உறுதிப்படுத்தப்படாத விவரங்களை பரப்ப வேண்டாம் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கான சமூக வலைதளங்களையும், துல்லியமான தகவல்களுக்கு பிரதான ஊடகங்களையும் பின்பற்ற வேண்டும் என்றும் MoI அதிகாரிகள் இந்நாட்டில் உள்ள மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

உண்மை அல்லாத போலி செய்திகள் மற்றும் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் தகவல்களை பரப்புதல் போன்ற ஆன்லைன் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை அல்லது 3 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் MoI அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!