வளைகுடா செய்திகள்

சவூதியில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு பகுதியளவு தளர்வு…!!! சவூதி மன்னர் அறிவிப்பு..!!!

சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பையொட்டி பிறப்பிக்கப்பட்ட நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு தற்பொழுது ஓரளவு தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் 24 மணி நேர லாக்டவுன் போடப்பட்டிருக்கும் மக்கா மற்றும் சில மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகள் முழுவதிலும் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படுவதாக சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் உத்தரவிட்டுள்ளதாக சவுதி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்பொழுது மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முடிவானது இன்று ஏப்ரல் 26,2020 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி மே 13,2020 என இரு வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் இந்த இரு வாரங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான ஊரடங்கு நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மக்கா மற்றும் 24 மணி நேர ஊரடங்கு அமலில் இருக்கும் பிற மாவட்டங்களுக்கும் இது பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பின் ஒரு பகுதியாக சில பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஷாப்பிங் மால்கள் ஆகியவை அடங்கும்.

இருப்பினும், மால்களுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய முடியாத வணிகங்களான அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள், ஜிம் கிளப்புகள், பொழுதுபோக்கு தளங்கள், சினிமாக்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் போன்றவற்றுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையில், புதன்கிழமை ஏப்ரல் 29,2020 முதல் மே 13,2020 வரை வணிகத்தின் தன்மைக்கு ஏற்ப ஒப்பந்த நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பணிபுரிவதற்கான நேர கட்டுப்பாடுகள் இல்லாமல் மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்ட முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதார, வணிக மற்றும் தொழில்துறை நிறுவனங்களில் முறையாக பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, அதிகாரிகளுக்கு இந்த ஆணை அறிவுறுத்தபட்டுள்ளது..

மேற்கூறப்பட்ட இந்த அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்நாட்டின் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!