வளைகுடா செய்திகள்

கத்தாரிலிருந்து தாயகம் செல்ல விருப்பம் தெரிவிப்பவர்களின் தகவல்களை சேகரிக்கும் இந்திய தூதரகம்..!!

கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் பல்வேறு காரணங்களால் தாயகம் திரும்ப விரும்பும் கத்தாரில் தங்கியுள்ள இந்தியர்களின் தகவல்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும், தகவல் நோக்கத்திற்காக விருப்பமுள்ளவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது.

“இந்தியாவுக்கு நாடு திரும்ப விருப்பம் தெரிவிக்கும் நபர்களைப் பற்றிய விபரங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம். இந்த இணைப்பைப் பின்தொடர்ந்து அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும். இந்த கட்டத்தில், தாய் நாடு செல்ல விரும்பும் கத்தாரில் உள்ள இந்தியர்களின் தகவல்களை சேகரிப்பது மட்டுமே எங்களின் நோக்கம். இந்தியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ” என்று தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கத்தாரில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தாயகம் செல்ல விரும்பும் இந்தியர்கள் தங்களின் பெயர், பாஸ்போர்ட் எண், வயது மற்றும் அந்த நபர் வைத்திருக்கும் விசா வகை – (குடியிருப்பு அனுமதி, வருகைக்கான விசா, சுற்றுலா விசா, வணிக விசா அல்லது குடும்ப விசா) உள்ளிட்ட அடிப்படை தகவல்களை பதிவிடுமாறு கத்தாரிற்கான இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்திய குடிமக்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல விரும்புவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவ அவசரநிலை (சுய அல்லது குடும்ப உறுப்பினர்), குடும்ப உறுப்பினரின் மரணம், தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சுற்றுலாவாசிகள், மாணவர்கள், பொது மன்னிப்பு / நாடுகடத்தல், வேலை இழப்பு, விசா காலாவதி போன்ற பல்வேறு காரணங்களினால் இந்தியா செல்ல விரும்புவோரின் தகவல்களை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் தூதரகம் கூறியுள்ளது.

இந்தியாவுக்கான விமான சேவை தொடங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் போது, இந்திய தூதரகம் அது குறித்த ஒரு முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் கூறுகையில் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் ஒரு நபருக்கான தகவல் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும் ஒரே குடும்பத்தில் இருக்கும் மற்ற உறுப்பினர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் தனித்தனி படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும் என்றும் கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!