வளைகுடா செய்திகள்

குவைத் : ஹவுசிங் ஏஜென்சியில் பணிபுரியும் 33 % வெளிநாட்டினர் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு..!!

வளைகுடா நாடுகளில் அதிகளவு வெளிநாட்டவர்களை கொண்டுள்ள ஒரு நாடான குவைத்தில் சமீப காலமாக வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைப்பது சம்பந்தமான சில திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அந்நாட்டில் கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும் ஒரு வகையில் இதற்கு காரணமாகும்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு மக்களையே பணியமர்த்தும் வகையில் அந்நாட்டு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும், தற்பொழுது அந்நாட்டில் 30 சதவீதம் மட்டுமே அந்நாட்டு குடிமக்களும் மீதமுள்ள 70 சதவீதமும் வெளிநாட்டவர்களும் இருப்பதால், வெளிநாட்டவர்களின் மக்கள் தொகையினை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக மாற்றுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும், அந்நாட்டின் எண்ணெய் துறையில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது இனி நிறுத்தப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பையும் பற்றி சில தினங்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம்.

குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மக்கள்தொகையினை 70 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்க குவைத் அரசாங்கம் முடிவு..!!

குவைத் ஆயில் கம்பெனியில் வெளிநாட்டினரை பணியமர்த்துவது நிறுத்தப்படும்..!! எண்ணெய் துறை அமைச்சர் அறிவிப்பு..!!

இந்நிலையில், ஒரு வருடத்தில் குவைத் நாட்டு குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக குவைத்தில் ஹவுசிங் ஏஜென்சியில் பணிபுரிந்து வரும் சுமார் 135 வெளிநாட்டவர்கள் செப்டம்பர் மாதத்திற்குள் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துக்கொள்வார்கள் என்று குவைத் நாட்டின் செய்தி நிறுவனம் (Al Qabas) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது குவைத் நாட்டில் ஹவுசிங் ஏஜென்சியில் பணிபுரியும் மொத்த வெளிநாட்டு தொழிலாளர்களில் 33 சதவீதம் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டின் வீட்டுவசதி அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ராணா அல் ஃபரிஸ் வெளியிட்ட அறிக்கையில், வீட்டு ஊழியர்களுக்கான பொது அதிகாரசபையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பதிலாக குவைத் நாட்டு குடிமக்களை மாற்றுவதற்கான மூன்று கட்ட திட்டம் நிறைவுற ஒரு வருடம் ஆகும் என்றும் ஒவ்வொரு கட்டத்திலும் 33 சதவீத வெளிநாட்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இறுதியில் 398 வெளிநாட்டு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் வெளிநாட்டவர்களை பணியமர்த்துவதை நிறுத்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கு வேலையை தொடர்ந்து புதுப்பிக்காமல், அந்த வேலைகளில் அவர்களுக்கு பதிலாக நாட்டு குடிமக்களை பணியிலமர்த்த பயிற்சியளிக்கும் திட்டத்தை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வெளிநாட்டினர் இருப்பதால் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் காலித் இந்த மாதத்தில், நாட்டில் உள்ள மக்கள்தொகை ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக நாட்டில் உள்ள வெளிநாட்டவர்களை அவர்களின் 70 சதவீத மொத்த மக்கள் தொகையிலிருந்து 30 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!