துபாய் மால், எமிரேட்ஸ் மாலில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 141 கடைகளுக்கு அபராதம்.. 1422 கடைகளுக்கு எச்சரிக்கை..!!
கோவிட் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை விதிகளை மீறியதற்காக ஒரே நாளில் (செப்டம்பர் 11, வெள்ளிக்கிழமை) துபாயில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நான்கு வணிக வளாகங்களில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது.
துபாயில் அமைந்திருக்கும் முக்கிய ஷாப்பிங் மால்களான துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், மிர்திஃப் சிட்டி சென்டர் மற்றும் ஃபெஸ்டிவல் சிட்டி மால் ஆகியவற்றில் கடந்த வெள்ளிக்கிழமை துபாய் காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, வணிக வளாகங்களில் உள்ள விற்பனை நிலையங்கள் சமூக இடைவெளி விதிகளை பின்பற்றாததற்காக அபராதம் மற்றும் எச்சரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு ஷாப்பிங் நாள்களிலும் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மொத்தம் 141 விதிமீறல்கள் மற்றும் 1,422 எச்சரிக்கைகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துபாய் மாலில் நான்கு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 92 விதிமீறல்கள் மற்றும் 620 எச்சரிக்கைகள் பதியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் ஐந்து இடங்களில் நடைபெற்ற ஆய்வில் 36 விதிமீறல்கள் மற்றும் 170 எச்சரிக்கைகள் பதியப்பட்டுள்ளது. அதேபோன்று மிர்திஃப் சிட்டி சென்டரில் 9 விதிமீறல்கள் மற்றும் 90 எச்சரிக்கைகளும், எமிரேட்ஸ் மாலில் 4 விதிமீறல்கள் மற்றும் 542 எச்சரிக்கைகளும் பதியப்பட்டுள்ளன.
ஷாப்பிங் மால்களில் இருக்கும் விற்பனை நிலையங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளி விதிகளுக்கு இணங்குவதை கண்காணிக்கும் போது பதியப்பட்ட இந்த விதிமீறல்களுக்கு அபராதமும் துபாய் காவல்துறையால் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.