UAE: போலி வேலை வாய்ப்புக் கடிதங்களால் ஏமாற்றப்படும் இந்தியர்கள்.. எச்சரிக்கும் துணை தூதரகம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புக் கடிதத்தை இந்திய துணை தூதரகத்திடம் ட்விட்டரில் பகிர்ந்த ஷூவைப் எனும் இந்தியர் அந்த வேலையின் உண்மைத்தன்மையை அறிய உதவி செய்யுமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
அதற்கு பதிலளித்த துணை தூதரகம் அந்த வேலை வாய்ப்புக் கடிதம் போலியானது என தெரிவித்துள்ளது.
இது குறித்து ட்விட்டரில் தூதரகமானது, “அன்புள்ள ஷூவைப், நீங்கள் பகிர்ந்த வேலை வாய்ப்புக் கடிதம் போலியானது !! ” என கூறியுள்ளது.
அத்துடன் “PBSK துபாய் மொபைல் பயன்பாடு மற்றும் மின்னஞ்சல் மூலமாக வேலை வாய்ப்புகளின் உண்மையான தன்மையை சரிபார்க்க இந்திய துணைத் தூதரகம் சேவைகளை வழங்குகிறது” என தெரிவித்துள்ளது.
ட்விட்டர் பயனரான ஷூவைப் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புக் கடிதத்தின் படத்தை ட்வீட் செய்து தூதரகத்தின் உதவியை நாடியிருந்தார். அக்கடிதத்தில் துபாயில் இருக்கும் டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் ஆஃபிஸ் பாய் வேலைக்கு மாதாந்திர சம்பளம் 3,470 திர்ஹமிற்கு வேலைக்கு எடுப்பதாகவும் தங்குமிடம் மற்றும் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அந்த கடிதத்தில் அதிகாரப்பூர்வமாக QR குறியீடும் உள்ளது.
Dear Shuaib, the job offer letter you shared is FAKE !!
Indian Consulate provides services to verify genuineness of job offers, through PBSK Dubai mobile app and also through email. Please educate your friends and relatives about this. @pbskdubai https://t.co/LXwBsNviNy pic.twitter.com/YTBiMOp30m— India in Dubai (@cgidubai) April 22, 2021
இந்தியத் துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கலாச்சாரம் (PIC) மற்றும் கல்விக்கான தூதர் சித்தார்த்த குமார் பரெய்லி, வேலை தேடுபவர்கள் PBSK மொபைல் பயன்பாட்டில் தங்கள் வேலை வாய்ப்புக் கடிதங்களை PDF வடிவத்தில் பதிவேற்றலாம் என்று முன்பு தெரிவித்திருந்தார்.
வளைகுடா நாடுகளில் இருந்து போலி வேலை வாய்ப்புகளால் இந்தியர்கள் பெரும்பாலும் ஏமாற்றப்படுவதால், அவற்றை நிவர்த்தி செய்ய இத்திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் இந்த அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதர் டாக்டர் அமன் பூரி, PBSK ஒரு நாளைக்கு சராசரியாக 100 அழைப்புகள் மற்றும் 25 மின்னஞ்சல்களைப் பெறுவதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.