இந்திய மசாலாப் பொருட்களுக்கான சந்தையில் நான்காவது இடத்தைப் பிடித்த UAE..!! முதல் 12 நாடுகளில் சவூதி அரேபியாவும் இடம்பிடித்ததாக தகவல்..!!
2022-23 நிதியாண்டில் இந்திய மசாலாப் பொருட்களுக்கான உலகளாவிய முதல் 12 சந்தைகளில் ஐக்கிய அரபு அமீரகம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாக இந்திய மசாலா வாரியம் (Spices Board of India) அறிவித்துள்ளது. அதுபோல, இந்திய மசாலாப் பொருட்களுக்கான முதல் 12 சந்தைகளில் சவூதி அரேபியாவும் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் 17 வரை மும்பையில் நடைபெறும் 14வது உலக மசாலா மாநாட்டிற்கு (World Spice Congress 2023), வளைகுடாவைச் சேர்ந்த மசாலா வர்த்தகர்கள், ஒழுங்குமுறை அதிகாரிகள், இறக்குமதி சங்கங்கள் மற்றும் வர்த்தக அதிகாரிகள் என ஏராளமானோர் அழைக்கப்படுவார்கள் என்று மசாலா வாரியத்தின் செயலாளர் D சத்தியன் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் தீம் “விஷன் 2030: ஸ்பைசஸ்” என்பதாகும். இது போன்ற மாநாடு முதலில் 1990-இல் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த உலக மசாலா மாநாடு நிகழ்வு, செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக, இந்த நிகழ்வு, COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு மசாலா வணிகத்தின் சமீபத்திய போக்குகள், வளர்ந்து வரும் சவால்கள் மற்றும் முன்னேற்றத்தைப் விவாதிக்க பங்குதாரர்களுக்கு வாய்ப்பை வழங்கும் என கூறப்படுகிறது.
பெரும்பாலும், இந்திய மசாலாப் பொருட்கள் அரபு உணவு வகைகளிலும், வளைகுடாவில் கிடைக்கும் தெற்காசிய உணவுகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. வளைகுடாவில் டீ, காபி போன்றவற்றிலும் இந்திய மசாலா பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.