மத்திய கிழக்கு நாடுகளின் முதல் டிரைவர் இல்லாத தானியங்கி பேருந்து சேவை அமீரகத்தில் துவக்கம்..!!
மத்திய கிழக்கு நாடுகளில் முதல் முறையாக டிரைவர் இல்லாத self driving vehicle என்று சொல்லக்கூடிய சுய ஓட்டுநர் வாகனங்கள் அமீரகத்தில் இருக்கும் அஜ்மானில் துவங்கப்பட்டுள்ளது. அஜ்மானில் டிரைவர் இல்லாத தானியங்கி பேருந்தானது செவ்வாய்க்கிழமை இயங்க ஆரம்பித்துள்ளது.
அஜ்மான் மாநகராட்சி மற்றும் திட்டமிடல் துறையின் இயக்குனர் ஷேக் ரஷீத் பின் ஹுமைத் அல் நுவைமி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மாநில அமைச்சர் உமர் அல் ஒலாமா ஆகியோர் அஜ்மான் கார்னிச்சில் தானியங்கி பேருந்தின் தொடக்க ஓட்டத்தில் பேருந்தில் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் அதிக செயல்திறன் கொண்ட சென்சார்கள் மற்றும் பாதசாரிகள் கடக்கும் மற்றும் போக்குவரத்து சிக்னல்களை கண்டறியும் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக இந்த திட்டத்திற்கு பொறுப்பான ION இன் திட்ட மேலாளர் நசீர் அல் ஷம்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “பேருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த (குறுக்குகள், சிக்னல்களை) கண்டறிந்து, பேருந்து இயக்கத்தை முழுமையாக நிறுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த பேருந்தில் 11 இருக்கைகள் உட்பட 15 பயணிகளுக்கு இடமளிக்க முடியும். மேலும் அஜ்மானின் கார்னிச் சாலையில் 3 கிமீ தூரத்திற்கு இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த பகுதியில் தானியங்கி பேருந்தில் உள்ள கேமராக்கள் மற்றும் சென்சார்களுக்கு பதிலளிக்கும் சென்சார்கள் சாலையில் பொருத்தப்பட்டுள்ளன,” என்று அவர் விளக்கினார்.
அல் ஷம்சி கூறுகையில், மத்திய கிழக்கில் முதல் ஓட்டுநர் இல்லாத இந்த தானியங்கி பேருந்து ஒரு பிரெஞ்சு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் பேருந்தில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ION இல் உள்ள எமிராட்டிகள் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து “2018 இல், நாங்கள் மஸ்தார் சிட்டியில் இந்த பேருந்தின் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டோம்,” என்று அல் ஷம்சி கூறினார்.
எதிர்காலத்தில் பேருந்து இயங்கும் தூரத்தை 7 கிலோ மீட்டராக நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.