தமிழக செய்திகள்

3,500 கோடி ரூபாய் மதிப்பில் லூலூ நிறுவனம் முதலீடு..!! 1 பில்லியன் டாலர் முதலீட்டை அமீரகத்தில் இருந்து எதிர்பார்க்கும் தமிழக முதல்வர்..!!

அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தமிழ்நாடானது ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 1 பில்லியன் டாலர் முதலீட்டு உறுதிப்பாட்டை எதிர்பார்க்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய முதலமைச்சர், “நாங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாத்தியமான முதலீட்டாளர்களைச் சந்திக்கவும், எமது மாநிலத்தின் பலத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தவும் வந்துள்ளோம். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முதலீட்டாளர்களிடமிருந்து நாங்கள் மிகவும் நேர்மறையான பதில்களை கண்டோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் “கடந்த எட்டு மாதங்களில், 124 நிறுவனங்கள் 9 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்துள்ளன. இது 1.9 லட்சத்திற்கும் அதிகமான நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையொட்டி ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த லூலூ குரூப் இன்டர்நேஷனல் நிறுவனம், மொத்தம் ரூ.3,500 கோடி முதலீட்டில் இரண்டு வணிக வளாகங்களையும், 100 சதவீத ஏற்றுமதி சார்ந்த உணவுப் பதப்படுத்தும் பிரிவுகளையும் தமிழகத்தில் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அத்துடன் 2,600 கோடி ரூபாய் முதலீட்டில் மற்ற ஐந்து நிறுவனங்களும் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்றும் இது தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 9,700 வேலைகளை வழங்க முடியும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக முதல்வர் தனது அமீரக பயணத்தின் போது, ​​ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மர்ரி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் தானி பின் அகமது அல் சையதி உட்பட பல அமீரக அமைச்சர்களை துபாயில் சந்தித்துள்ளார்.

மேலும், “38,000 தொழிற்சாலைகளுடன் இந்தியாவிலேயே “மிகவும் தொழில்மயமான மாநிலம்” தமிழ்நாடு. இது பெரும்பாலான தொழில்கள் தமிழ்நாட்டில் தங்கள் செயல்பாடுகளை அமைப்பதற்கு ஒரு வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை வழங்குகிறது.”

“உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மற்றும் சந்தைகளுடன் தமிழ்நாட்டின் இணைப்பு, முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய காரணியாகும்.  தமிழ்நாட்டில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள் 2 உள்நாட்டு விமான நிலையங்கள் உலகளாவிய மற்றும் உள்நாட்டு விமான இணைப்புக்காக உள்ளன. அதேபோல், பெரிய கப்பல் வழித்தடங்களில் சரக்குகளை கொண்டு செல்வதற்கு வசதியாக, மாநிலத்தில் நான்கு பெரிய மற்றும் 19 சிறிய துறைமுகங்கள் உள்ளன” என்றும் அவர் கூறியுள்ளார்.

$1 டிரில்லியன் பொருளாதாரம்

2019-20 ஆம் ஆண்டில் தமிழகத்தின் பொருளாதாரம் 265 பில்லியன் டாலர்களாக உள்ளது என்று கூறிய அவர் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான முயற்சியை முன்னெடுத்துள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இரட்டை இலக்க வளர்ச்சியை மாநிலம் அடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன்  “இது சாதாரண பணியல்ல. இருப்பினும், இதை நாங்கள் அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து “ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ், IT போன்ற துறைகளில் தமிழ்நாடு வலுவாக உள்ளது. இந்தத் தொழில்களுக்கு எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்தி வருகிறோம்.” என்று முதல்வர் கூறினார்.

தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களை பற்றி கூறுகையில் “தமிழ்நாட்டை உலக அளவில் முதலீட்டுத் தலமாக மேம்படுத்துவதில் புலம்பெயர் தமிழர்கள் பெரும் பங்காற்ற முடியும். மேலும் NRI களின் பலத்தைத் திரட்ட அரசாங்கம் அவர்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறது”

“வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கும் அவர்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையே பாலமாக உள்ளனர். உலகெங்கிலும் உள்ள முக்கிய வணிக பகுதிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். அங்கு நமது புலம்பெயர்ந்த தமிழர்களை முதலீடு செய்யவும், தொழில்நுட்ப அறிவை வழங்கவும், மாநிலத்தை உலகளவில் முதலீட்டு இடமாக மேம்படுத்தவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களுக்காக பிரத்தியேக குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!