துபாய்: ரமலானை முன்னிட்டு குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரங்களில் மாற்றம்..!!
வரவிருக்கும் ரமலான் மாதத்தை முன்னிட்டு துபாயின் உலக புகழ்பெற்ற குளோபல் வில்லேஜ் செயல்படும் நேரங்களில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரமலான் மாத நேரங்களில் குளோபல் வில்லேஜ் தினமும் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஃப்தார் மற்றும் சஹர் நேரங்களின் போது விருந்தினர்களுக்கு இடமளிக்க, புதிய செயல்பாட்டு நேரங்களுடன் பார்வையாளர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பாக தேரத்தை செலவிடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் ரமலான் மாதத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய சலுகைகளையும் குளோபல் வில்லேஜ் அறிவித்துள்ளது. ஒவ்வொரு இரவும் அரேபிய ஆர்கெஸ்ட்ரா குளோபல் வில்லேஜின் பிரதான மேடையில் இரண்டு முறை நிகழ்த்துவது உட்பட வயலின் பிளேயர் மற்றும் லைட்ஷோ கேலிடோஸ்கோப் (light show Kaleidoscope) போன்ற பல நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் இங்கு கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு பார்வையாளர்கள் சிறப்பான ரமலான் மரபுகளை ஒரே மாதிரியான அமைப்பில் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமின்றி, விருந்தினர்கள் இங்குள்ள 250க்கும் மேற்பட்ட உணவகங்களில் ஏதேனும் ஒன்றில் இருந்து இஃப்தார் அல்லது சஹருக்கான உணவை ஆர்டர் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமலான் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளுடன் பார்வையாளர்கள் 3,500 ஷாப்பிங் அவுட்லெட்டுகளில் சிறப்பான ரமலான் ஷாப்பிங்கை மேற்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இங்குள்ள இந்தியா பெவிலியனில் ரமலான் மாதத்தை முன்னிட்டு தனித்துவமான களிமண் சமையல் பாத்திரங்கள் விற்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ரமலானையொட்டி கண்களைக் கவரும் வண்ணமயமான விளக்குகள் முதல் அழகான தெரு அலங்காரம் வரை ஜொலிக்கவுள்ள குளோபல் வில்லேஜின் இந்த வண்ணமிகு சூழல் ஏப்ரல் 29, 2023 வரை விருந்தினர்களை வரவேற்கும் என்பதால், பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை குளோபல் வில்லேஜ் அளிக்கும் என்றும் நிர்வாகக் குழு உறுதியளித்துள்ளது.