Covid19: துபாயில் இன்று முதல் அமலுக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட நெறிமுறைகள்…!! என்னென்ன..??
துபாயில் உள்ள நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு வெளியிட்ட அறிவிப்பில் கொரோனாவால் பாதித்த நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் கொரோனாவிற்கான அறிகுறி இல்லாதவர்கள் இனி தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என அறிவித்துள்ளது.
அமீரகத்தில் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைத்தின் அறிவிப்புகளுக்கு இணங்க மேற்கொள்ளப்பண்ட இந்த முடிவானது சனிக்கிழமை (இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என்று துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் “துபாயில் உள்ள அனைத்து பொது உட்புற இடங்களிலும் முக கவசங்களை அணிவது தொடர்ந்து கட்டாயமாக உள்ளது, அதே நேரத்தில் வெளிப்புற பகுதிகளில் இது கட்டாயமில்லை. வெளிப்புற இடங்களில் விருப்பப்பட்டால் முக கவசம் போட்டுக்கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட பயண நெறிமுறைகளில், துபாய் செல்லும் பயணிகள், QR குறியீட்டைக் கொண்ட அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் “துபாய்க்கு வரும் தடுப்பூசி பெறாத பயணிகள் கடந்த 48 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவையோ அல்லது பயணத் தேதிக்கு ஒரு மாதத்திற்குள் பெறப்பட்ட QR குறியீட்டைக் கொண்ட கொரோனா பாதித்து குணமடைந்ததற்கான சான்றிதழையோ சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.