அமீரக செய்திகள்

துபாய் ஏர்போர்ட்டில் பயணிகளுக்கு இலவசமாக ஐஸ்கிரீம் வழங்கும் எமிரேட்ஸ்.. சம்மரை கூல் ஆக்க புது முயற்சி..!!

துபாயில் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சோர்ந்து போகும் வாடிக்கையாளர்களை புத்துணர்ச்சியூட்ட, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) வழியாகச் செல்லும் அதன் பயணிகளுக்கு ஜில்லென்ற ஐஸ்கிரீம்களை இலவசமாக வழங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

துபாய் விமான நிலையம் முழுவதும் உள்ள புறப்படும் பகுதிகளைச் (Departure area) சுற்றி வைக்கப்பட்டிருக்கும் 6 ஐஸ்கிரீம் வண்டிகள், பயணிகளுக்கு குளுகுளு விருந்தை வழங்கி வருகிறது. எனவே, எமிரேட்ஸ் விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொரு பயணியும் தனக்கான இலவச ஐஸ்கிரீமை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இங்கு பயணிகளுக்காக பலவித சுவைகள் அடங்கிய ஐஸ்கிரீம் வகைகளான வெண்ணிலா, அரேபிய காபி, டேட்ஸ் ஐஸ்கிரீம், மாம்பழ சர்பெத் போன்றவற்றையும் பயணிகள் குடும்பத்துடன் இங்கு ருசித்து மகிழலாம் எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அத்துடன், எமிரேட்ஸ் அறிவித்திருக்கும் இந்த இலவச ஐஸ்கிரீம் சலுகையை துபாய் விமான நிலையத்தில் இருந்து பறக்கும் பயணிகள், இம்மாதத்தின் நடுப்பகுதி வரையிலும் அதாவது ஜூலை 16ம் தேதி வரையிலும் அனுபவிக்கலாம் என்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தவிர, அமீரகத்தில் இருந்து இங்கிலாந்திற்கு பறக்கும் மற்றும் அங்கிருந்து துபாய் வரும் அனைத்து பயணிகளும், ஜூலை மாதத்தில் ஸ்ட்ராபெரிகளை அனுபவிக்கலாம் என்றும் எமிரேட்ஸ் கூறியுள்ளது. குறிப்பாக, அனைத்து ஸ்ட்ராபெர்ரிகளும் பூச்சிக்கொல்லி போன்ற இரசாயனம் இல்லாமல் துபாயில் உள்ள Bustanica செங்குத்து பண்ணையில் சரியான நிலையில் வளர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய ஆரோக்கியமான ஸ்ட்ராபெரி மற்றும் ஸ்ட்ராபெரி சார்ந்த உணவுகள் அனைத்தும் எகானமி வகுப்பு முதல் ஃபர்ஸ்ட் கிளாஸ் வரை என அனைத்து இங்கிலாந்து பயணிகளுக்கும் எமிரேட்ஸ் விமானத்தில் வழங்கப்படும் உணவு மெனுவில் கிடைக்கும் என எமிரேட்ஸ் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
error: Content is protected !!