தமிழக செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களை துபாய்க்கு கல்வி சுற்றுலா அழைத்து வந்த தமிழக கல்வித்துறை அமைச்சர்..!!

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கனவுகளுக்கு சிறகுகளை அளித்து, அவர்களுக்கான கல்வி சுற்றுலாவிற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து வந்துள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. நவம்பர் 10 முதல் 13 வரையிலான நான்கு நாள் பயணத்தின் போது, ​​தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 68 மாணவர்களை அமீரகத்தின் உலகப் புகழ்பெற்ற இடங்களுக்கு அவர் அழைத்து வந்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமீரக தலைவரும் இந்த முயற்சியின் பின்னணியில் இருந்தவருமான எஸ்.எஸ்.மீரான் இது பற்றிக் கூறுகையில், “அமீரகம் வந்த சிறுவர்கள் யாரும் இதற்கு முன் விமானத்தில் பயணித்ததில்லை. பலரிடம் பாஸ்போர்ட் கூட இதற்கு முன் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமீரகத்தின் முக்கிய சுற்றுலா இடங்களான மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர், புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் அக்வாரியம் முதல் லூவர் மியூசியம் அபுதாபி, ஷேக் சையத் மசூதி மற்றும் புதிதாகத் திறக்கப்பட்ட இந்துக் கோயில் போன்ற அனைத்து இடங்களுக்கும் அவர்கள் சென்று தங்கள் நேரத்தை கழித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதனுடன் அவர்கள் முகமது பின் ரஷீத் நூலகம் (MBR library) மற்றும் ஷார்ஜாவில் நடைபெற்ற ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியையும் பார்வையிட்டனர் என கூறப்பட்டுள்ளது. பின்னர் MBR நூலகத்துக்கு தமிழக முதல்வர் சார்பில் 1,000 புத்தகங்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

இந்த பயணத்திற்கு எஸ்ஸா அப்துல்லா அல் குரைர் மற்றும் மிர்சா ஹுசைன் அல் சயேக் ஆகியோர் ஆதரவு அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!