UAE: எக்ஸ்போவை முன்னிட்டு ஆறு நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை..!! அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பை வெளியிட்ட ஷேக் ஹம்தான்..!!
அமீரகத்தில் எக்ஸ்போ 2020 துவங்கவிருப்பதை முன்னிட்டு துபாயில் அரசு ஊழியர்களுக்கு ஆறு நாட்கள் வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கவிருப்பதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் பட்டத்து இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் வழங்கிய உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆறு மாதங்கள் நடைபெறும் உலக கண்காட்சியில் உலகளாவிய கண்டுபிடிப்புகளை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்வதற்கு உதவும்.
நிகழ்வு தொடங்கும் அக்டோபர் 1 முதல் எக்ஸ்போ முடிவடையக்கூடிய மார்ச் 31, 2022 அன்று வரை ஊழியர்கள் இந்த விடுமுறையினைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஊழியர்களின் திறன்களைக் கூர்மைப்படுத்தவும் எதிர்காலத்தில் அவர்களை தயார்படுத்தவும் உதவும்.
ஷேக் ஹம்தான் கூறுகையில், “எக்ஸ்போ 2020 ஒரு தனித்துவமான நிகழ்வு. “எக்ஸ்போவின் ‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்’ என்ற கருப்பொருளை நடைமுறைக்குக் கொண்டுவருவதே எங்கள் குறிக்கோள். எங்கள் குழு உலகம் முழுவதிலுமிருந்து ஆக்கப்பூர்வமான கருத்துக்களை அறிந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என தெரிவித்துள்ளார்.
இந்த எக்ஸ்போவில் உலகின் 192 நாடுகளுக்கென்றும் தனித்தனி பெவிலியன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் ஒட்டு மொத்த உலகையும் ஒரே இடத்தில் பார்க்கக்கூடிய வாய்ப்பை எக்ஸ்போ வழங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.