சவூதி குடியுரிமை சட்டத்தில் பெரிய திருத்தத்தை அறிவித்த அரசு.. நிபந்தனைகளும் வெளியீடு..!!
சவூதி அரேபியாவின் குடியுரிமைச் சட்டத்தில் பெரிய திருத்தம் செய்து புதிய அறிவிப்பு ஒன்றை சவூதி அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த புதிய விதியின் கீழ், சவூதி அரேபிய நாட்டின் பெண்களின் குழந்தைகள் 18 வயது பூர்த்தியடைந்த பின்பு சவூதி நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.
குடியுரிமை வழங்குவதற்கான சவூதி அரேபிய குடியுரிமை அமைப்பின் 8 வது பிரிவின் திருத்தத்திற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குடியுரிமை வழங்குவதற்கான அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சவூதி அரசின் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட குழந்தைகளுக்கு சவூதி நாட்டின் குடியுரிமை வழங்குவது தொடர்பான திருத்தப்பட்ட தேசிய அமைப்பின் பிரிவு 8 ன் படி, ஒரு வெளிநாட்டு தந்தை மற்றும் சவூதி நாட்டின் தாய்க்கு ராஜ்யத்தில் பிறந்த குழந்தைக்கு சில தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் சவூதி குடியுரிமை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், குடியுரிமை பெறுவதற்கான நிபந்தனைகளில் சம்பந்தப்பட்ட நபர் அரபு மொழியில் சரளமாக இருக்க வேண்டும் எனவும், அவர் சட்டப்பூர்வ வயதான 18 வயதை நிரம்பும்போது ராஜ்யத்தில் நிரந்தர ரெசிடென்ட் அந்தஸ்தைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் நல்ல நடத்தை மற்றும் நல்ல குணம் கொண்டவராக இருக்க வேண்டும் எனவும், எந்தவொரு அநாகரீகமான செயலுக்காகவும் குற்றவியல் தண்டனையோ அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் சிறைத்தண்டனையோ பெற்றிருக்கக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.