UAE: வீட்டு வாடகை செலுத்த செக்கிற்கு (cheque) பதிலாக நேரடி டெபிட் பேமெண்ட் முறை..!! துபாய் நிலத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை..!!
துபாயில் உள்ள குத்தகைதார்கள் (tenants) காசோலையை பயன்படுத்துவதற்கு பதிலாக தற்பொழுது நேரடி டெபிட் மூலம் தங்கள் வாடகையைச் செலுத்தலாம் என்று கடந்த ஜனவரி 27 அன்று துபாய் நிலத் துறை (DLD) அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. DLD வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, துபாயில் உள்ள அனைத்து குத்தகைதாரர்களுக்கும் இது பொருந்தும், ஏனென்றால் பதிவுசெய்யப்பட்ட வாடகை ஒப்பந்தமான Ejari இப்போது Noqodi Direct Debit என்ற டிஜிட்டல் பேமன்ட் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
அதுபோல, அமீரகத்தின் சென்ட்ரல் வங்கியின் (UAEDDS) நேரடி டெபிட் சிஸ்டமானது குடியிருப்பாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து மீண்டும் மீண்டும் பணம் செலுத்துவதற்கு வசதியாக தானியங்கு கட்டண முறையை வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த செயல்முறையானது குத்தகைதாரர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறுவதுடன் காசோலைகளின் (cheque) பயன்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ரியல் எஸ்டேட் நிபுணர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுவான சிக்கல்களுக்கு ஒரே தீர்வு:
இது குறித்து haus & haus ரியல் எஸ்டேட்டின் குத்தகை இயக்குனரான தாமஸ் பால்சன் கூறுகையில், தற்போது Ejari அமைப்பு UAEDDS உடன் இணைக்கப்பட்டுள்ளதால், இது பரந்த அளவில் செயல்படுத்தப்படலாம், ஏனெனில் இது குத்தகைதாரர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்களுக்கு மிகவும் வசதியான செயல்முறையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல், பொதுவாக ஒழுங்கற்ற கையொப்பங்களால் செக் பவுன்ஸ் (cheque bounce) ஆவதும், காசோலைகளில் உள்ள பெயர்கள் மற்றும் எண்களை தவறாக குறிப்பிடுவதால் சில சிக்கல்கள் ஏற்படும் என்பதையும் கூறியுள்ளார். அத்துடன், காசோலைகள் நேரடியாக (physical) ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதால், வெளிநாட்டில் பயணம் செய்யும் அல்லது வசிக்கும் நில உரிமையாளர்களைக் கொண்ட குத்தகைதாரர்களுக்கு இது சிரமமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
எனவே, நேரடி டெபிட் சிஸ்டம் வழங்கும் தானியங்கு கட்டண முறையானது மேற்கூறிய பொதுவான சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அடுத்தபடியாக, புதிய செயல்முறை குறித்து Betterhomes இன் சொத்து நிர்வாகத் தலைவர் நிரால் ஜாவேரி அவர்கள் பேசுகையில், ஒருவர் வாடகையை பிந்தைய தேதியிடப்பட்ட காசோலைகள் மூலம் செலுத்தினால், ஒப்பந்தத்தை ரினியூவலின் போது மட்டுமே நேரடி டெபிட் கட்டணத்திற்கு மாற்ற முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒப்பந்தத்தை ரினியூவல் செய்யும்போது அல்லது புதிதாக பதிவு செய்யும் போது சொத்து உரிமையாளர்கள் தேவையான அனைத்து கட்டணத் தகவல்களையும் உள்ளிட முடியும் என்று கூறியுள்ளார். அதேவேளை, குத்தகைதாரர் தனது வங்கி விவரங்களைப் ரினியூவல் செய்து, நேரடி டெபிட் படிவத்தில் கையொப்பமிடுவதற்கான லிங்க்கை மின்னஞ்சல் மூலமாக பெறுவார். அதன் பிறகு, படிவம் அப்லோட் செய்யப்பட்டு, உறுதிப்படுத்துவதற்காக வங்கிக்கு அனுப்பப்படும் என்று விளக்கியுள்ளார்.