UAE: டிரக்குகள், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் எமிரேட்டினுள் நுழைய தடை..!! ரமலானை முன்னிட்டு அறிவிப்பு வெளியீடு..!!
ரமலான் மாதத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் டிரக்குகள் செல்வதற்கு புதிய நேர அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என அபுதாபி அறிவித்துள்ளது. அபுதாபி காவல்துறை செவ்வாயன்று வெளியிட்ட செய்தியில் இந்த நேர மாற்றத்தை தெரிவித்துள்ளது. இதில் கனரக வாகனங்கள் காலை மற்றும் மாலை peak hours என சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் சாலைகளில் செல்ல அனுமதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அபுதாபி மற்றும் அல் அய்ன் வழித்தடங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை டிரக்குகள் இயக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அபுதாபி சாலைகளில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மதிய நேரங்களான பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை அபுதாபி மற்றும் அல் அய்ன் நகர சாலைகளில் டிரக்குகள் அனுமதிக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.
ரமலான் மாதத்தில் விபத்துகளை கட்டுப்படுத்தும் அதிகாரிகளின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்குமாறு ஓட்டுநர்களை போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குனரகம் வலியுறுத்தியுள்ளது. சாலைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் மற்றும் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்க ஸ்மார்ட் அமைப்புகள் உள்ளன என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.