UAE: ரமலான் மாதத்திற்கான பார்க்கிங் கட்டண நேரங்களில் மாற்றத்தை அறிவித்த மற்றொரு எமிரேட்..!! பூங்காக்கள், வாகன பதிவு மையங்கள் செயல்படும் நேரங்களும் வெளியீடு..!!
ரமலான் மாதம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு வாகன பார்க்கிங் கட்டண நேரங்களில் மாற்றத்தை ஷார்ஜா அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மற்றொரு எமிரேட்டான அஜ்மானின் முனிசிபாலிட்டியும் தற்பொழுது ரமலான் மாதத்திற்கான வாகன பார்க்கிங் கட்டண நேரத்தை அறிவித்துள்ளது. இதன்படி வியாழன் முதல் சனிக்கிழமை வரை வாகன நிறுத்துமிடங்களின் வேலை நேரம் இரண்டு ஷிப்டுகளாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை என இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பார்க்கிங் இலவசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அஜ்மானில் உள்ள பூங்காக்கள் வாரத்தின் ஏழு நாட்களிலும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் அஜ்மான் சென்ட்ரல் மற்றும் மனாமா இறைச்சிக் கூடம் அங்கீகரிக்கப்பட்ட வேலை நேரத்தில் பொதுமக்களைப் பெறுவதற்கு வசதியாக இருப்பதாக நகராட்சித் துறை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி திங்கள் முதல் வியாழன் வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையிலும் இறைச்சிக் கூடங்கள் திறக்கப்படும் என்றும் அதே நேரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், அஜ்மான் மற்றும் மனாமாவில் உள்ள இறைச்சிக் கூடம் காலை 9 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 1.30 மணி வரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் அஜ்மான் போக்குவரத்து ஆணையம் ரமலான் மாதத்தில் தனது சேவைகளின் அட்டவணையை அறிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் வாகனங்களை சரிபார்த்து பதிவு செய்வதற்கான விரைவு சேவை மையங்கள், பொது போக்குவரத்து பேருந்துகள், கடல் போக்குவரத்து மற்றும் ஆன்-டிமாண்ட் பேருந்து சேவை ஆகியவை அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
விரைவு வாகன ஆய்வு (express vehicle inspection) மற்றும் பதிவு மையங்கள் (registration centers) இரண்டு ஷிஃப்டுகளில் அதன் சேவைகளை வழங்கும் என கூறப்பட்டுள்ளது. அதாவது ஞாயிறு முதல் வியாழன் வரை, காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் வரையிலும், சனி முதல் வெள்ளி வரையிலான மாலை ஷிஃப்டுக்கு இரவு 8:30 மணி முதல் அதிகாலை 2 மணி வரை சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ரமலான் காலத்தில் கடல் போக்குவரத்து (ஆப்ரா) நடவடிக்கைகளும் இரண்டு ஷிப்டுகளாக பிரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. முதல் ஷிஃப்டில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மற்றும் இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரையிலும் சேவைகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்-டிமாண்ட் பேருந்து சேவை காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ‘the route’ அப்ளிகேஷன் மூலமாகவோ அல்லது 600599997 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ +971600599997 என்ற வாட்ஸ்அப் மூலமாகவோ டாக்சிகளை புக் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.