கனமழை எதிரொலி: தற்பொழுது வரை 4 நிலையங்களை மூடியுள்ள துபாய் மெட்ரோ.. தற்போதைய நிலவரம் என்ன..??
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் பெய்த வரலாறு காணாத கனமழை விமானப் போக்குவரத்து உட்பட ஒட்டு மொத்த போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்தது. அதேபோல், கனழைக்குப் பிறகு, பயணிகளிடையே மிகவும் பிரபலமான துபாய் மெட்ரோ சேவைகளும் பாதிக்கப்பட்டன.
துபாய் மெட்ரோ நிலையங்களில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், ஏராளமான பயணிகள் பல நிலையங்களில் சிக்கித் தவித்தனர். சீரற்ற வானிலையால் மெட்ரோ சேவையில் இடையூறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, RTA படிப்படியாக மெட்ரோ இயக்கங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
RTA வெளியிட்ட அறிவிப்பின்படி, தற்பொழுது ரெட் லைன் இரு திசைகளிலும் செயல்படத் தொடங்கியுள்ளது. இருப்பினும், இந்த நான்கு நிலையங்கள் இன்னும் செயல்படாமல் மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை ஆன்பாசிவ், ஈக்விட்டி, அல் மஷ்ரெக் மற்றும் எனர்ஜி ஆகிய மெட்ரோ நிலையங்கள் ஆகும்.
இது தொடர்பாக RTA வெளியிட்டுள்ள சமீபத்திய புதுப்பிப்பில், துபாய் மெட்ரோவானது சென்டர்பாயிண்ட் முதல் எக்ஸ்போ 2020 மற்றும் UAE எக்ஸ்சேஞ்ச் நிலையங்கள் வரை செயல்படும் என்று கூறியுள்ளது.
மேலும், சென்டர்பாயின்ட் மெட்ரோ நிலையத்திலிருந்து வரும் பயணிகள், பிசினஸ் பே அல்லது அல் கைல் நிலையங்களில் வேறு நிலையத்திற்கு மாறுவது அவசியம் என்றும், அதன் பிறகு, அவர்கள் அடுத்த நிலையத்திற்கு செல்ல ஷட்டில் பேருந்து சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இன்று திங்கள்கிழமை காலை மெட்ரோ ரெட் லைனின் ரெட் பிசினஸ் பே மெட்ரோ நிலையத்தில் (அல் சஃபா பக்கத்தில்) பயணிகள் கூட்டம் அலை மோதியுள்ளது. அதேசமயம், உலக வர்த்தக மையத்தை (World Trade Centre) நோக்கி அல் சஃபா டோல் கேட் அருகே ஷேக் சயீத் சாலையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை கருத்தில் கொண்டு பயணிகள் அனைவரும் மெட்ரோ நிலையங்களில் உள்ள அறிவுறுத்தல் பலகைகளைப் பின்பற்றவும், துபாய் மெட்ரோ ஊழியர்களிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறவும் RTA வலியுறுத்தியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel