UAE: ஈத் விடுமுறையில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பொது போக்குவரத்தில் பயணம்..!! அஜ்மான் போக்குவரத்து ஆணையம் தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் உள்ள பொது மற்றும் சுற்றுலாத் தலங்களில் ஈத் அல் ஃபித்ர் பண்டிகையை முன்னிட்டு அதிகளவில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குவிந்திருக்கின்றனர். அதிலும் இந்த விடுமுறை நாட்களில் வெளியில் சென்று அனுபவிக்க எண்ணிய பலர் தங்கள் சொந்த வாகனங்களை வீட்டிலேயே விட்டுவிட்டு, பொதுப் போக்குவரத்து அமைப்புகளில் பயணம் செய்துள்ளனர்.
இதனால் பல்வேறு போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க உயர்வை எட்டியுள்ளது. அதன்படி, அஜ்மானில் ஈத் விடுமுறையின் போது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 426,780 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அஜ்மானில் உள்ள அஜ்மான் பொதுப் போக்குவரத்து ஆணையத்தின் (APTA) செயல் இயக்குநர் ஜெனரல் அஹ்மத் சக்ர் அல் மத்ரூஷி அவர்கள் கூறுகையில், விடுமுறை நாட்களில் மிகவும் முக்கியமான மற்றும் நெரிசலான பகுதிகளில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை ஈடுகட்ட திறம்பட திட்டங்களை உருவாக்குவதில் துறை பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ச்சியான போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதும் விடுமுறையின் போது அதிக எண்ணிக்கையிலான பயணிகள் சேவையை பயன்படுத்துவதை உறுதி செய்வதும் இதன் நோக்கமாக இருந்தது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக சிறப்பு நிகழ்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ விடுமுறையின் போது அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்திற்கான தேவையை சமாளிக்க பல்வேறு போக்குவரத்து வழிமுறைகளை இணைக்க APTA முயன்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.