சவூதியில் தென்பட்ட ஷவ்வால் பிறை.. நாளை வெள்ளிக்கிழமை ஈத் அல் பித்ர் என அதிகாரிகள் அறிவிப்பு..!!
சவூதி அரேபியாவில் இன்று மாலை ஏப்ரல் 20 வியாழக்கிழமை அன்று ஷவ்வால் பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஏப்ரல் 21 (நாளை) ஈத் அல் பித்ர் தினமாக கொண்டாடப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரக அரசும் இது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஈத் அல் ஃபித்ரை குறிக்கும் ஷவ்வால் மாத பிறை ஏப்ரல் 20 அன்று தென்பட வாய்ப்பில்லை என்றும் ஏப்ரல் 22 சனிக்கிழமையன்று ஈத் அல் ஃபித்ரின் முதல் நாளாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பிறை பார்க்கப்பட்டதாக சவூதியின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.