10,000 தொழிலாளர்களின் பணி அனுமதிகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ள குவைத்!! உள்துறை அமைச்சகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா..??
குவைத்தின் மனிதவளத்திற்கான பொது ஆணையம் (Public Authority for Manpower – PAM) அத்தாரிட்டியில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் செல்லுபடியாகாத 10,000 க்கும் மேற்பட்ட பணி அனுமதிகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியான தகவல்களின் படி, உள்துறை அமைச்சருடன் பணி அனுமதிகளின் செல்லுபடியை சரிபார்த்த பிறகு, ரத்து செய்வதற்கான சட்ட நடைமுறைகளை ஆணையம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈத் அல்-ஃபித்ர் விடுமுறையைத் தொடர்ந்து பணி அனுமதியை ரத்து செய்யும் நடவடிக்கை தொடங்கும் என்று கூறப்படுகிறது. பணி அனுமதி நடைமுறைகளுக்கான பிரிவு 35 இன் படி, ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒரு தொழிலாளி குவைத்தை விட்டு வெளிநாட்டில் இருக்கும் போது பணி அனுமதி காலாவதியாகிவிட்டாலோ அல்லது ஏதேனும் காரணத்திற்காக அவர்கள் நாடு கடத்தப்பட்டாலோ அனுமதி ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பிற காரணங்களுக்காக பணி அனுமதிகளை ரத்து செய்வது குறித்து அடுத்த மாதம் முதல் ஆணையம் ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. ஆவணங்களை வழங்குவதில் தோல்வி மற்றும் அங்கீகாரம் பெறாத கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட காரணங்கள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த அனுமதிகளை ரத்து செய்வதற்கான முடிவுகள் பொறியாளர்கள் சங்கம் மற்றும் குவைத் கணக்காளர்கள் சங்கம் போன்ற அங்கீகாரம் பெற்ற தொழில்முறை சங்கங்களிலிருந்து பெறப்பட்ட சோதனைகளின் முடிவுகளின் படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்முறை சோதனைகளில் தேர்ச்சி பெறாமல் இருந்து, சட்டவிரோதமாக சான்றிதழ்களைப் பெற்றதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எந்தவொரு பணி அனுமதியையும் மனிதவள ஆணையம் வழங்காது என்று தெரிவித்துள்ளது. இத்துடன் குடியிருப்பு அனுமதிகளை வழங்குவதை உள்துறை அமைச்சகத்துடன் ஆணையம் ஒருங்கிணைக்கும், அதாவது அவர்களின் அனுமதி ரத்து செய்யப்படும் எவரும் சட்டவிரோத குடியிருப்பாளராக மாறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
கிடைத்துள்ள தகவல்களின் படி, குவைத்தில் தேவையில்லாத வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும், மக்கள்தொகை ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கும் பல அமைச்சகங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் வெளிநாட்டவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளையும், வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்ப்பதற்கான பெரிய சந்தையாக மாறியுள்ள மொபைல் டாக்ஸி உரிமங்களை வழங்குவதற்கான நிபந்தனைகளையும் உள்துறை அமைச்சகம் மதிப்பாய்வு செய்யும் என்றும் கூறப்படுகிறது.