UAE: மஹ்ஸூஸ் டிராவில் முதன் முறையாக 20 மில்லியன் திர்ஹம் பரிசை தட்டிச் சென்ற அதிர்ஷ்டசாலி..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 124வது மஹ்ஸூஸ் டிராவில் அதிர்ஷ்டஷாலி ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசை வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். மேலும் இவர் தான் 2023 இல் புதுப்பிக்கப்பட்ட மஹ்சூஸ் டிராவின் புதிய பரிசு அமைப்பிலிருந்து வெற்றிபெற்ற முதல் மல்டி மில்லியனர் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்னர் வரையிலும் 10 மில்லியன் திர்ஹம்சாக இருந்த முதல் பரிசானது சில மாதங்களுக்கு முன்பு 20 மில்லியனாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல் பரிசான 20 மில்லியன் திர்ஹம்சை வென்ற நபர் குறித்த விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர ஐந்து இலக்கங்களில் நான்கைப் பொருத்திய 19 வெற்றியாளர்களுக்கு இரண்டாவது பரிசான 200,000 திர்ஹம்கள் ஒவ்வொருக்கும் சமமாக பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், மூன்றாவது பரிசை வென்ற 757 வெற்றியாளர்கள் தலா 250 திர்ஹம்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
இவற்றை தவிர நிச்சயப்பரிசாக ஒவ்வொரு வாரமும் ஒரு ரேஃபிள் டிரா வெற்றியாளர் என்ற அடிப்படையில், இந்த முறை பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஷெர்லன் என்பவர் 1 மில்லியன் திர்ஹம் பரிசை வென்று, டிராவின் ஆறாவது மில்லியனர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். மேலும், நேற்று நடந்த டிராவில் சுமார் 21,389,250 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையை 778 பங்கேற்பாளர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
மேலும் ரமலான் கோல்ட் ப்ரோமோஷனில் வெற்றி பெற்ற நான்காவது வெற்றியாளரான அபூபக்கர் என்பவர் 400 கிராம் தங்க நாணயங்களை பரிசாக தட்டிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் 1 கிலோ தங்கம் வெல்லும் வாய்ப்பை ஒரு அதிர்ஷ்டசாலி பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. டிராவில் வழங்கப்படும் பரிசுகள் உயர்த்தப்பட்டாலும், பங்கேற்பதற்கான விதிகள் மற்றும் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.