UAE: வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளம் சூழ்ந்த சாலைகள்!! பல்வேறு எமிரேட்டுகளில் வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கை…
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆங்காங்கே இன்று (வியாழக்கிழமை) திடீரென மழை பெய்துள்ளதால், குடியிருப்பாளர்கள் நிலையற்ற வானிலையை அனுபவித்து வருகின்றனர். தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, துபாய், அல் அய்ன் மற்றும் ராஸ் அல் கைமா உட்பட நாட்டின் பல பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. எனவே, பல்வேறு எமிரேட்களில் உள்ள அதிகாரிகள் போக்குவரத்து விதிகளை பின்பற்றவும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும் வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஹத்தா(துபாய்) மற்றும் காத் (RAK) ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அபாயகரமான வானிலை காரணமாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அபுதாபி, ஃபுஜைரா மற்றும் ஷார்ஜாவின் சில பகுதிகளிலும் மிதமான மழை பெய்துள்ளது. அத்துடன், புழுதிப் புயல் துபாய் மற்றும் பிற எமிரேட்களின் சில பகுதிகளை சூழ்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.,மேலும் எந்தவொரு அசம்பாவித சம்பவத்தையும் தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் காலநிலை காரணமாக வாகனங்களை ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல, பின்வரும் பகுதிகளில் லேசான முதல் கனமழை பதிவாகியுள்ளது:
- அல் ஃபூவா – அல் அய்ன்
- அல் ஹியா – அல் அய்ன்
- கல்பா – ஷார்ஜா
- அல் அய்ன் – துபாய் சாலை
- அல் முனியாய் – ராஸ் அல் கைமா
- ஹட்டா – துபாய்
- நஹில் – அல் அய்ன்
- அல் பித்யா, அல் குரையா – ஃபுஜைரா
- காட் – ராஸ் அல் கைமா
- அல் அஜ்பான் – அபுதாபி
- அல் ஹலாஹ்/ வாடி அபாதிலா/ திப்பா – புஜைரா
- அல் திக்டகா மற்றும் அல் ஹம்ரானியா – ராஸ் அல் கைமா
- சீஹ் ஷுஐப் – அபுதாபி
எனவே, மழைக்காலங்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்வருமாறு ஆணையம் வெளியிட்டுள்ளது.
- நிலையற்ற வானிலையின் போது, பெரும்பாலும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்குமாறும், மிக அவசியத் தேவை இருந்தால் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக வாகனத்தை ஓட்டுமாறும் வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
- சாலை தெளிவாக உள்ள போது குறைந்த ஒளியை பயன்படுத்த வேண்டும்.
- அதிகாரப்பூர்வ சேனல்களில் வானிலை முன்னறிவிப்பை கண்காணிக்கவும் அதிகாரிகளின் ஆலோசனைகளை கடைபிடிக்கவும் வேண்டும்.
இதற்கிடையில், துபாய் காவல்துறையும் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் வெளி வீதிகளில் வீசும் மணல் மற்றும் தூசுகள் குறித்து மக்களை எச்சரித்துள்ளது. மேலும், நிலையற்ற வானிலை காரணமாக வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அபுதாபி காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர். அதேசமயம், எலெக்ட்ரானிக் போர்டுகளில் காட்டப்படும் மாறிவரும் வேக வரம்புகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஷார்ஜா காவல்துறை கூறுகையில், அழுக்கு மற்றும் பிற பொருட்களை வீசும் தூசி காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்கவும், வேகத்தை குறைக்கவும் வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.