துபாய்: மருத்துவ சிக்கல்கள் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.!!
துபாயில் முக கவசம் அணிவதன் மூலம் ஏதேனும் உடல்நல குறைபாட்டால் அவதிப்படுபவர்கள் தற்பொழுது முகக்கவசம் அணிவதில் இருந்து விலக்கு பெறலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துபாய் சுகாதார ஆணையம் (DHA) மற்றும் துபாய் காவல்துறை ஆகியவை சில மருத்துவ நிபந்தனைகளுடன் வசிக்கும் மக்கள் http://dxbpermit.gov.ae என்ற இணையதள முகவரியில் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனுமதிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பம் விண்ணப்பம் ஐந்து நாட்களுக்குள் சரிபார்க்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு வேண்டி விண்ணப்பித்த பிறகு, DHA இன் பொது மருத்துவக் குழு அலுவலகம் அந்த விண்ணப்பத்தை மதிப்பீடு செய்யும் எம்பதும், அதில் விண்ணப்பதாரர் முகக்கவசங்களால் மோசமடையக்கூடிய சில மருத்துவ சிக்கல்களால் பாதிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் மருத்துவ அறிக்கை இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவ அறிக்கைகள் தவிர, விண்ணப்பதாரரின் எமிரேட்ஸ் ஐடி உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களும் அதனுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுளளது.
இது குறித்து DHA சார்பாக தெரிவிக்கையில், சில வகை மருத்துவ சிக்கல்கள் கொண்ட மக்களுக்கு விலக்கு அளிக்கும் இந்த முடிவு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறியுள்ளது. விலக்கு பெற்றவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்றாலும், தங்களையும் மற்றவர்களையும் கொரோனா தொற்று அபாயத்திலிருந்து பாதுகாக்க முடிந்தவரை பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தியுள்ளது.
முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு பெற தகுதியான நபர்கள்…
– தோல் அலர்ஜியால் பாதிக்கப்படுபவர்கள், குறிப்பாக முகத்தில் இரத்தப்போக்கு, அரிப்பு மற்றும் செதில் தோல் போன்ற கடுமையான அறிகுறிகள் இருக்கும் நபர்கள்
– வாய், மூக்கு அல்லது முகத்தை பாதிக்கும் கடுமையான ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் தொற்று உள்ளவர்கள்
– கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற நாட்பட்ட சைனசிடிஸ் உள்ள நபர்கள்
– கட்டுப்பாடற்ற ஆஸ்துமா நோயாளிகள்
– மன மற்றும் உளவியல் நிலைமைகளைக் கொண்ட நபர்கள்