அமீரக செய்திகள்

2040ல் துபாய் எப்படி இருக்கும்.? ஆச்சரியமூட்டும் திட்டங்களை வெளியிட்ட துபாய் ஆட்சியாளர்.. ஒரு டைம் டிராவல் போகலாம் வாங்க..!!

1960களில், துபாயின் மக்கள் தொகை வெறும் 40,000 ஆக இருக்கும்போதே, அதன் முதல் நகர்ப்புறத் திட்டத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. தற்போது, 63 ஆண்டுகளுக்கு பிறகு துபாயின் மக்கள்தொகை 3.6 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ள வேளையில், அதன் ஏழாவது நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட எமிரேட்டின் 2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டமானது (2040 Urban Master Plan), 5.8 மில்லியன் குடியிருப்பாளர்களை வரவேற்கும் பசுமையான மற்றும் நிலையான நகரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் படி, இன்னும் 20 ஆண்டுகளில், துபாய் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொதுப் போக்குவரத்துக்கு அருகில் வசிப்பார்கள். மேலும், நகரத்தின் பசுமையான பகுதிகள் 105 சதவீதம் அதிகரிக்கும், அத்துடன் பொது கடற்கரைகள் 400 சதவீதம் நீட்டிக்கப்படும்.

மேலும், குடியிருப்பாளர்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து 20 நிமிடங்களில் நடந்தோ அல்லது சைக்கிள் மூலமாகவோ தாங்கள் செல்ல வேண்டிய இடங்களை அடைவதற்கு ஏற்றவாறு வசதிகள் உருவாக்கப்படும்.

அதுமட்டுமின்றி, இம்முயற்சியின் ஒரு பகுதியாக பின்வரும் பல திட்டங்கள் துபாயின் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளன. அது பற்றிய விபரங்களை கீழே பார்க்கலாம்.

துபாயின் 60% இயற்கை வளங்களால் சூழப்பட்டிருக்கும்

2040 நகர்ப்புற மாஸ்டர் திட்டத்தின் கீழ் துபாயின் முக்கியமான இடங்கள் மற்றும் பகுதிகளை பசுமையாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக துபாயின் டவுன்டவுனுக்கு செல்லும் பாதையும் பசுமையாக மாற்றப்படும். அதன் மாதிரி புகைப்படத்தை இங்கு பார்க்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், இயற்கை இருப்புக்கள் மற்றும் கிராமப்புற இயற்கை பகுதிகள் துபாயின் மொத்த பரப்பளவில் 60 சதவீதமாக இருக்கும். ஆகவே, சேவை பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பணியிடங்களை இணைக்க இதுபோன்ற பசுமை சாலைகள் எமிரேட் முழுவதும் நிறுவப்படும்.

பாலைவனப் பாதையில் பறக்கும் ஏர் டாக்ஸிகள்:

நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக பாலைவனப் பகுதியான அல் குத்ராவில் உள்ள செயற்கை ஏரிகளின் நெட்வொர்க்கில் 100 கிலோமீட்டர் தொலைவில் பறக்கும் விமான டாக்ஸிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ரூட் 1 அல்லது சைஹ் அல் சலாம் இயற்கைக் காட்சிப் பாதையில் ஏர் டாக்சிகள் முதல் ஹாட் ஏர் பலூன்கள், கயாக்கிங், குதிரை சவாரி, ஸ்கைடைவிங், திறந்தவெளி சினிமா மற்றும் கிளாஸ் டோம்கள் (glass domes) கொண்ட லாட்ஜ்கள் வரை அனைத்தும் கொண்டுவரப்படும்.

ஹத்தா மலைத்தொடரில் நீர்வீழ்ச்சிகள், கேபிள் கார் மற்றும் பல:

துபாயின் சுற்றுலா தலங்களில் ஒன்றான ஹத்தா மலைத்தொடரில் ஆண்டு முழுவதும் சுற்றுலாவிற்கான அனைத்து அம்சங்களும் சேர்க்கப்பட்டு வருகிறது. முக்கிய திட்டங்களில் கூடுதல் பார்வையாளர்களை ஈர்க்க, ஹத்தா நீர்வீழ்ச்சியின் நான்கு சோலைகளின் பசுமையான புகலிடம் நீர் கால்வாயைக் கடக்கும் பாலங்களுடன் இணைக்கப்படும். மற்றொரு திட்டத்தின்படி, 5.4 கிமீ நீளத்திற்கு உச்சியில் பார்வையாளர்கள் குதூகலிக்க கேபிள் கார் அமைக்கப்படும்.

பார்வையாளர்களைக் கவரும் கிராமப்புறம்:

Countryside and Rural Areas Development Master Plan என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக துபாயைச் சுற்றியுள்ள பரந்த பகுதிகளில் உள்ள இயற்கை இருப்புக்கள் மற்றும் தொல்பொருள் தளங்கள் பாதுகாக்கப்படும். அதுமட்டுமின்றி, 2,216 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், லெஹ்பாப், மர்கம், அல் மர்மூம், அல் லிசைலி, அல் ஃபக்கா மற்றும் அல் அவீர் ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாக உருவாக்கப்படும்.

நீட்டிக்கப்படும் பொது கடற்கரைகள்:

குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், தற்போதைய 21 கிமீ பொது கடற்கரைகள் ஐந்து மடங்கு அதிகமாக 105 கிமீ வரை நீட்டிக்கப்படும்.

அத்துடன் கடற்கரைகளில் நடைபாதைகள், சதுப்புநிலங்கள், நீர் விளையாட்டுகள், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் டிராக்குகள் மற்றும் அருமையான ஓய்வு பகுதிகள் என தாராளமான வசதிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய் ஆட்சியாளரால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த 2040 நகர்ப்புற திட்டம் முடிவடைந்து மேற்கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பயண்பாட்டிற்கு வரும் போது, அது உலக நாடுகளை எல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை.

Related Articles

Back to top button
error: Content is protected !!