அமீரக செய்திகள்

அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைத் தாண்டி சாதனை… வர்த்தகம் 240 பில்லியன் டாலர்களை எட்டியதாக தகவல்..!!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று தொழில் செய்யும் நபர்களில் அந்த காலம் முதலே அதிகளவிலான இந்தியர்கள் அரபு நாடுகளுக்கு வந்து பணிபுரிந்துள்ளனர். மில்லியன் கணக்கான இந்தியர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கும் அரபு நாடுகளில் கடந்த சில வருடங்களாகவே அந்நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

இந்நிலையில் அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 9 மில்லியனைத் தொட்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் ஆறாவது இந்தியா-அரபு கூட்டாண்மை மாநாட்டை தொடங்கி வைத்த அமைச்சர், அரபு நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் 240 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது என்ற நற்செய்தியையும் பகிர்ந்துள்ளார்.

டிசம்பர் 2008 இல் அரபு லீக்கிற்கும், இந்தியாவிற்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் விளைவாக இந்தியா-அரபு கூட்டாண்மை மாநாடு இந்தியாவிலும், அரபு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகிறது. இதில் அரபு நாடுகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு, வர்த்தகம் மற்றும் புதிய சேவைகள் போன்றவையே இந்த மாநாட்டின் கருப்பொருள் ஆகும். இந்த ஆண்டு இந்த மாநாட்டினை, இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு, அரபு வணிகர்களின் கூட்டமைப்பு மற்றும் அரபு சேம்பர்களின் ஒன்றியம் ஆகியவை கூட்டாக நடத்துகின்றன.

இந்த மாநாடு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் முரளீதரன் கூறுகையில், இந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் வலுவாக உள்ளது என்று கூறியுள்ளார். சமீபத்திய தொற்றுநோய் மற்றும் உலக அரசியல் மோதல்களின் போதும், இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருப்பதாக எடுத்துரைத்துள்ளார்.

இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60 சதவீதத்திற்கும் மேலாக அரபு நாடுகள் வழங்குவதாகவும், மேலும் உரங்கள் மற்றும் அவற்றிற்கு தொடர்பான பொருட்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக அரபு நாடுகளில் இருந்து வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மட்டும்மல்லாமல், பல தலைமுறைகளாக, அரபு நாடுகளில் உள்ள இந்தியாவின் பெரிய வெளிநாட்டினர் சமூகம் அவர்கள் வசிக்கும் நாடுகளின் செழிப்புக்கு பங்களித்துள்ளது என்றும் பெருமையுடன் கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
error: Content is protected !!