எமிரேட்ஸ் விமானத்தில் முன்கூட்டியே உணவை ஆர்டர் செய்யும் வசதி அறிமுகம்..!! உணவு வீணாவதைத் தடுக்க நடவடிக்கை..!!
எமிரேட்ஸ் விமான நிறுவனம், பயணிகள் விமானத்தில் உணவருந்துவதற்கு உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யும் சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஆகவே, பயணிகள் இனி தங்கள் விமானப் பயணத்திற்குத் தேவையான உணவை தங்களின் பயண நேரத்திலிருந்து 14 நாட்கள் முதல் 24 மணிநேரம் வரை ஆர்டர் செய்ய முடியும்.
இந்த புதுமுயற்சியின் மூலம், பயணிகளுக்கு விருப்பமான உணவை வழங்குவதுடன் ஒட்டுமொத்த உணவு வீணாவதைக் குறைப்பப்பதுமே முக்கிய நோக்கமாகும் என்றும் எபிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் வெளியிட்டிள்ள தகவல்களின் படி, முதல் கட்டமாக ஜூலை 25 முதல் துபாயில் இருந்து லண்டன் ஹீத்ரோ, லண்டன் கேட்விக் மற்றும் லண்டன் ஸ்டான்ஸ்டெட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் மற்றும் வரும் அனைத்து விமானங்களிலும் உள்ள பிசினஸ் வகுப்பில் உணவு ஆர்டர் சேவை செயல்படுத்தப்படும் என தெரியவந்துள்ளது.
மேலும் கூடிய விரைவில், விமான நிறுவனம் அதன் நெட்வொர்க்கில் உள்ள மற்ற இடங்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் மற்றும் இந்த சேவையின் செயல்பாடு குறித்த வாடிக்கையாளர்களின் கருத்துக்களை உன்னிப்பாகக் கண்காணித்து மேம்படுத்தப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, AI-enabled சேவையின் மூலம், வாடிக்கையாளரின் விருப்பத்தை டிராக் செய்தல் மற்றும் கேபின் குழு அறிக்கைகளுக்கு பயனளிக்கும் வகையில் இந்த சேவை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவு, விமானத்தில் பயணிகளுக்கு பிரீமியம் உணவு அனுபவத்தை வழங்க மெனு திட்டமிடல் போன்றவற்றை எளிதாக்குகிறது.
எனவே, பயணிகள் விமானத்திற்கு 14 நாட்களுக்கு முன்பு, எமிரேட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது எமிரேட்ஸ் அப்ளிகேஷனில் உள்ள ஆன்போர்டு மெனுவை அணுகலாம் மற்றும் தேவைப்பட்டால் சிறப்பு உணவுகளை முன்கூட்டியே ஆர்டர் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.