அபுதாபி காவல்துறை வெளியிட்ட வீடியோ!! வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டலை வழங்கிய அதிகாரிகள்…
அபுதாபி காவல்துறையினர், சாலையின் விளிம்பில் இருந்து வாகனங்களை முந்திச் செல்வதைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளனர். மேலும், இதுபோன்ற செயல்கள் கடுமையான தண்டனைக்குரிய போக்குவரத்து விதிமீறலாகக் கருதப்படும் என்றும், இந்த மீறல்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அபுதாபி காவல்துறை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் (Monitoring and Control Center) ஒருங்கிணைந்து, சாலையின் ஓரத்தில் இருந்து முந்திச் செல்வதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் பின்விளைவுகளை விளக்கும் வீடியோ ஒன்றினை “You Comment” என்ற முன்முயற்சியின் ஒரு பகுதியாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
அதேசமயம், போக்குவரத்து மற்றும் ரோந்து இயக்குநரகம் முறையான முந்திச் செல்லும் நடைமுறைகளின் அவசியம் பற்றி விவரித்துள்ளது. சாலை விளிம்பு குறிப்பாக அவசரநிலை மற்றும் அவசரகால வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டியுள்ளது.
அதாவது, விபத்து நடந்த இடத்தை விரைவாக அணுகுவதற்கும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும் இந்த சாலை விளிம்பு முக்கியமானதாக இருக்கும். UAE ஃபெடரல் டிராஃபிக் சட்டத்தின்படி, இந்த விதிமீறல்களுக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் 6 போக்குவரத்து புள்ளிகள் விதிக்கப்படும்.
அதுமட்டுமின்றி, சாலைகளில் பயணிக்கும் போது வாகனங்களுக்கு இடையே பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்குமாறும் வாகன ஓட்டுநர்களுக்கு அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.