போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை அறிவித்துள்ள ராஸ் அல் கைமா காவல்துறை..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா காவல்துறையானது 2019 ம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து அபராதங்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த தள்ளுபடியானது வரும் செப்டம்பர் மாதம் 1 ம் தேதி முதல் அக்டொபர் 1 ம் தேதி வரை என ஒரு மாதத்திற்கு அமலில் இருக்கும் என்றும் ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது.
தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த தள்ளுபடியானது சிறை வைக்கப்பட்ட வாகனங்களின் அபராதத்தை ரத்து செய்வதையும் உள்ளடக்கியது எனவும் இருப்பினும் ஆபத்தான முறையில் வாகனம் ஒட்டிய குற்றங்களுக்கு இந்த அபராதத தள்ளுபடி பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில் ராஸ் அல் கைமா காவல்துறையின் முன்முயற்சிகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையானது, போக்குவரத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவும் மற்றும் ஓட்டுநர்களை ஊக்குவிக்கவும், விதிக்கப்பட்ட அபராதங்களைத் தீர்ப்பதற்கும், பொதுமக்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும் உதவும் எனவும் காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
இந்த அபாரத தள்ளுபடி பெறுவதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஸ்மார்ட் அப்ப்ளிகேஷன்கள் மூலம் ஓட்டுநர்கள் தங்களின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றும், விதிமீறல்களுக்காக கரும்புள்ளிகள் பெற்ற ஓட்டுனர்கள், சேவை மையம் சென்று அதனை தங்களின் லைசன்ஸுடன் இணைத்த பின்னர் தங்களின் அபராதக் கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாலை பயனர்களின் பாதுகாப்பிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஒட்டியது, அபாயகரமான முறையில் கனரக டிரக்கை ஒட்டியது, அதிக சப்தத்துடன் வாகனத்தை ஒட்டியது மற்றும் போக்குவரத்து போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சித்தது போன்ற ஆபத்தான குற்றங்கள் புரிந்த ஓட்டுனர்களுக்கு இந்த அபாரத தள்ளுபடி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.