மறைந்த தந்தைக்கு நினைவஞ்சலி செலுத்திய துபாய் ஆட்சியாளர்..!! X தளத்தில் வீடியோ வெளியிட்டு நினைவுகூர்ந்த ஷேக் முகம்மது….
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், 33 ஆண்டுகளுக்கு முன்பு காலமான அவரது மறைந்த தந்தைக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
துபாய் ஆட்சியாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) X தளத்தில் சிறிய வீடியோ கிளிப் ஒன்றினை வெளியிட்டு, “கடவுள் என் தந்தை மற்றும் துபாயின் தந்தையான ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் மீது கருணை காட்டட்டும், அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” என்று எழுதியுள்ளார்.
மேலும், “தேசங்களை நிறுவியவர்கள், கட்டமைப்புகளை உருவாக்கி, மனிதகுலத்தை மாற்றியவர்கள் மீது கடவுள் கருணை காட்டட்டும்” என்றும் அரபு மொழியில் பதிவிட்டுள்ளார்.
துபாயின் தந்தை என்றழைக்கப்பட்ட மறைந்த ஷேக் ரஷீத் அவர்கள் 1958 இல் ஆட்சியாளராகப் பதவியேற்றார். மீன்பிடி கிராமம் மற்றும் பாலைவன துறைமுகமாக இருந்த துபாயை இன்று வளர்ந்து வரும் மிகப்பெரிய உலகளாவிய நகரமாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.
அமீரகத்தின் முதல் துணை ஜனாதிபதி மற்றும் பிரதமராக பணியாற்றிய அவர், 1990 இல் இறக்கும் வரை 32 ஆண்டுகள் துபாயை ஆட்சி செய்துள்ளார். ஷேக் முகமது தனது மறைந்த தந்தையைப் பற்றி கூறிய போது, “தந்தை இறந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள் அவருடைய பயணத்தை முடித்து, அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் “அவருடைய மக்கள் தொடர்ந்து அவரை நினைத்து அவருக்காக பிரார்த்திப்பார்கள், மேலும் மரபு மற்றும் நகரத்திற்கான அவரது பணி நிலைத்திருக்கும் கடவுள் அவர் மீது கருணை காட்டி, பரலோகத்தில் உயர்ந்த சொர்க்கத்தை அவருக்கு வழங்கட்டும்” என்றும் கூறியுள்ளார்.
ஷேக் முகம்மது வெளியிட்ட புத்தகம்:
ஷேக் முகம்மது கடந்த மாதம் ‘The Journey From the Desert to the Stars’ என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகத்தில், அவரது தந்தையைப் பற்றி எழுதியிருந்தார்.
رحم الله والدي ووالد دبي الشيخ راشد بن سعيد آل مكتوم وأسكنه فسيح جناته ..
رحم الله من أسّس الأوطان .. وشيد البنيان .. وبنى الإنسان ..
٣٣ عاماً مرت على رحيله .. أكملنا فيها مسيرته .. وأنفذنا فيها وصاياه ..
وانطلقنا فيها نحو آفاق عالمية مستندين على أساساته ..
سيبقى شعبه يذكره… pic.twitter.com/38s1CvLpbR— HH Sheikh Mohammed (@HHShkMohd) October 6, 2023
அவர் எழுதியிருந்ததாவது; “எனது தந்தை (ஷேக் ரஷீத்) எனக்கு சிறுவயதில் பாலைவனத்தைப் பற்றி நிறைய கற்றுக் கொடுத்தார். பாலைவனத்தில் உயிர்வாழும், அதன் வனவிலங்குகள், ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகளுடன் அதன் குளிரிலும் வெப்பத்திலும் இணைந்து வாழ்வதற்கும், அதன் வானத்தில் உள்ள நட்சத்திரங்களின் வழியாகச் செல்வதற்குமான திறன்களை அவர் எனக்குள் விதைத்தார்” என்று ஆட்சியாளர் நெகிழ்வாகக் குறிப்பிட்டுள்ளார்.