UAE: குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை…!! போலியான ஆன்லைன் ஆவணங்களை தயாரித்தால் 750,000 திர்ஹம்கள் அபராதம்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது வழக்கு துறையானது (UAE Public Prosecution) குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை தற்சமயம் வெளியிட்டுள்ளது. அதன் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டுள்ள இடுகைகளின்படி, அமீரகத்தில் பயன்படுத்தப்படும் போலியான ஆன்லைன் ஆவணங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமீரகத்தில் ஆன்லைன் மோசடிகள் போன்ற சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் ஆணை-சட்ட எண். 34 இன் பிரிவு 14 இன் படி, மத்திய மற்றும் உள்ளூர் அரசாங்கத்தின் மின்னணு ஆவணங்களையோ அல்லது கூட்டாட்சி அமைப்புகளின் ஆன்லைன் ஆவணங்களையோ போலியானதாக தயார் செய்பவர்களுக்கு தற்காலிகமாக சிறைத்தண்டனையும் 150,000 திர்ஹம்கள் முதல் 750,000 திர்ஹம்கள் வரையிலான அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்க அமைப்புகள் மட்டுமின்றி வேறு எந்தவொரு நிறுவனத்தின் ஆவணங்களையும் பொய்யாக்கினால், 100,000 திர்ஹம்கள் முதல் 300,000 திர்ஹம்கள் வரையிலான அபராதம் அல்லது தடுப்புக் காவலில் வைக்க தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, போலியான ஆவணங்களை தெரிந்தே பயன்படுத்துபவர், பொய்மைப்படுத்திய குற்றத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக்கு ஆளாக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.