UAE: ஹத்தாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்!! வாகனங்களில் இருந்து 2 முதியவர்களை காப்பாற்றிய மீட்புக்குழுவினர்…
இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளை கனமழை தாக்கிய பிறகு, மலைகளில் இருந்து விழும் அருவி, நிரம்பி வழியும் பள்ளத்தாக்குகள், ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு, சாலைகளில் குளம் போல் தேங்கியிருந்த மழைநீர் என பல்வேறு நிகழ்வுகளை குடியிருப்பாளர்கள் சந்தித்துள்ளனர்.
இப்படியான சூழலில், ஹத்தாவில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த வாகனங்களில் இருந்து இரண்டு முதியவர்களை துபாய் காவல்துறையின் மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
மேலும், மீட்பு நடவடிக்கையின்போது வானிலை மோசமாக இருந்ததால் அவர்களை மீட்பது கடினமாக இருந்துள்ளது. ஆகையால், துறைமுக காவல் நிலையத்தில் கடல் மீட்புப் பிரிவைச் சேர்ந்த குழுவினர், ஹத்தா காவல் நிலையத்தில் நில மீட்புக் குழுவினருடன் இணைந்து, பள்ளத்தாக்கில் சிக்கியிருந்த ஐந்து வாகனங்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.
அந்த சமயத்தில், மீட்புக்குழுவினர் விரைவாக செயல்பட்டு வாகனங்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இழுத்துச் சென்றதாகவும், வாகனங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருவர் இருந்ததாகவும் ஹத்தா செக்டரின் கமாண்டர் பிரிகேடியர் டாக்டர் ஹசன் சுஹைல் அல் சுவைதி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, பாதகமான காலநிலையின் போது பள்ளத்தாக்குகளிலிருந்து விலகி இருப்பது குறித்து அதிகாரிகளின் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்து வந்தாலும், ஓட்டுநர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இது சில நேரங்களில் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது.
ஆகவே, வானிலை காரணமாக வழங்கப்படும் எச்சரிக்கைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்குமாறும், பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களை விலகி இருக்குமாறும் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel