அமீரக செய்திகள்

அமீரகத்தில் NEET தேர்வு மையங்களை திறந்த இந்தியா.. மகிழ்ச்சியை தெரிவித்த இந்தியப் பெற்றோர்கள்..!!

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் (NEET) தேர்வை நடத்தி வரும் இந்தியாவின் தேசிய சோதனை முகமையானது (NTA) அதன் மருத்துவ தேர்வு மையங்களை துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் திறப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், அமீரகத்தில் குடும்பமாக வசிக்கும் இந்தியப் பெற்றோர்கள் பலருக்கும் இந்த செய்தி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இது தொடர்பாக NTA வெளியிட்ட ட்வீட்டில், இளங்கலை பட்டதாரிகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET-UG) 2024ம் ஆண்டு உலகெங்கிலும் சுமார் 14 சர்வதேச மையங்களில் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதில் அமீரகத்தின் இந்த மூன்று எமிரேட்களிலும் தேர்வு மையங்கள் திறக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்தியாவின் இந்த அறிவிப்பு, வெளிநாடுகளில் தேர்வுக்கு தயாராகி வரும் இந்திய மாணவர்களின் பெற்றோர்களை பெரிதும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த வாரம், NTA வெளியிட்ட முதற்கட்ட ஆவணத்தில் வெளிநாட்டு மையங்கள் எதுவும் பட்டியலிடப்படவில்லை என்று செய்திகள் வெளியிடப்பட்டது. இது பெற்றோர்களையும் மாணவர்களையும் கவலையடையச் செய்தது.

அதாவது, தேர்வுக்காக இந்தியாவுக்குப் பயணம் செய்வது தங்கள் குழந்தைகளின் செயல்திறனைப் பாதிக்கலாம் என்றும், விமான டிக்கெட்டுகளின் விலை உட்பட அவர்களுடன் பெற்றோர்களும் சேர்ந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால் வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் போன்ற இதிலுள்ள சிக்கல்களை நினைத்து பல பெற்றோர்களும் கவலையடைந்தனர்.

முதன்முதலாக 2021 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் சில சர்வதேச நாடுகளில் மருத்துவம் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் முன்நிபந்தனையான NEET-UG தேர்வுகளுக்கான சர்வதேச மையங்களை இந்தியா முதலில் திறந்தது. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தியாவுக்குச் செல்ல முடியாததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு வெளியே தேர்வு மையங்களை திறக்குமாறு மனு அளித்து வந்த பெற்றோருக்கு இது நிம்மதி அளித்துள்ளது.

இருப்பினும், இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஆவணத்தில் இந்தியாவில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்த நிலையிலும், சர்வதேச மையங்கள் எதுவும் பட்டியலிடப்படாமல் இருந்தது பலருக்கும் வேதனையளித்தது.

ஆனால், இப்போது ​​அதன் முதல் அறிவிப்பு வந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு, NTA உலகளாவிய பல நகரங்களில் அதன் நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது அமீரகம் உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

Related Articles

Back to top button
error: Content is protected !!