UAE: சொன்ன டைம் மாறாது.. 1 மில்லியன் கிலோமீட்டர் பயண தூரத்தை சரியான நேரத்தில் நிறைவு செய்து சாதனை படைத்த துபாய் மெட்ரோ…!!
துபாயின் பொது போக்குவரத்து அமைப்பு துவங்கப்பட்டு 14 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) புதிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் துபாய் மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1 மில்லியன் கிலோமீட்டர் பயண தூரத்தை நிறைவு செய்து சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 99.7% பயணங்களை சரியான நேரத்தில் முடித்து சாதனை புரிந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இதுவரை மொத்தம் 123.4 மில்லியன் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது எனவும் அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் ரயில்களில் பொருத்தப்பட்டுள்ள 10,000 சிசிடிவி கேமராக்கள் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதால் மக்கள் நம்பிக்கையுடன் ரயில்களில் பயணிக்கின்றனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல், ரெட் மற்றும் கிரீன் லைன் பாதைகளில் உள்ள 14 கிமீ நீளமுள்ள துபாய் மெட்ரோ சுரங்கங்களை ஆய்வு செய்வதற்கு சிறப்பு ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன எனவும் இதனால் பயணிகள் கவலை இன்றி சுரங்க பாதைகளில் தைரியமாக நடமாட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 14 ஆண்டுகளில் மெட்ரோவை மேம்படுத்த பல அதிநவீன தொழில்நுட்பங்களை அரசு புகுத்தியுள்ளது. ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒரு முறை அனைத்து ரயில்களும் மறு சீரமைப்பு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரயில்களின் பராமரிப்புக்காக மட்டுமே இதுவரை ஒரு மில்லியன் மணி நேரம் செலவிடப்பட்டுள்ளதாக கணக்கீடுகள் கூறுகின்றன. எனவே, இந்த சிறப்பான பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு பணிகள் தான் மெட்ரோ ரயில் தனது ஒரு மில்லியன் மணி நேரத்தை வெற்றிகரமாக முடிக்க உதவி புரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், அதிநவீன கேமராக்கள் மற்றும் லேசர் தொழில்நுட்பம் ரயில் பிரிவுகளை தவறாமல் ஸ்கேன் செய்து, சுமூகமான ரயில் இயக்கங்களுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.