அபுதாபியில் 6 இலட்சம் திர்ஹம்ஸ் பணத்துடன் தலைமறைவான ஊழியர் அதிரடியாக கைது.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!!
அபுதாபியில் உள்ள பிரபல வணிக நிறுவனத்தின் கிளை ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர், தனது முதலாளிக்கு சொந்தமான சுமார் 600,000 திர்ஹம்ஸ் பணத்தை திருடிய குற்றத்திற்காக அபுதாபி காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்ட விபரங்களின் படி, பாதிக்கப்பட்ட வணிக நிறுவனத்தின் நிர்வாகம், பணம் திருடப்பட்டதாகவும், ஊழியர் ஒருவர் தலைமறைவாகி விட்டதாகவும் அபுதாபியில் உள்ள அல் கலிதியா (Al Khalidiya) காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அல் கலிதியா காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வுக் குழுக்கள் உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர் தொடர்பான தகவல்களைச் சேகரிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டது. இதன் விளைவாக, பணத்துடன் தலைமறைவான அந்த நபரை தற்போது அபுதாபி காவல்துறை கைது செய்துள்ளது.
தற்போது, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்டவரின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், வழக்குரைஞர் அலுவலகம் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் தற்சமயம் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், நிறுவனம் அளித்த புகாருக்கு உடனடியாக பதில் அளித்து விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக நிறுவனத்தின் நிர்வாகம், அபுதாபி காவல்துறையின் ஜெனரல் கமாண்டிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டதுடன் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ததில் திருப்தியையும் தெரிவித்துள்ளது.
அத்துடன் வணிக உரிமையாளர்கள், இத்தகைய குற்றங்களுக்கு எதிரான விரிவான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அபுதாபியை தளமாக கொண்டு இயங்கி வரும் பிரபல லுலு குழுமத்தில் பணிபுரிந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், 6 இலட்சம் திர்ஹம்ஸ் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக அபுதாபி காவல் நிலையத்தில் லுலு குழுமம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel