துபாயில் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கு வசதியான பயணத்தை வழங்கி வரும் துபாய் டாக்ஸி கம்பெனி (DTC), கூடுதலாக 250 புதிய எலெக்ட்ரிக் டாக்ஸிகளை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் நிலைத்த்தன்மை ஆண்டை ஒட்டி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், துபாய் டாக்ஸி நிறுவனத்தில் உள்ள சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் மொத்த எண்ணிக்கையை 87 சதவீதமாக உயர்த்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் டாக்ஸி கம்பெனியில் மொத்தம் 6,210 டாக்ஸிகள் உள்ளன. தற்பொழுது, செய்யப்பட்டுள்ள விரிவாக்கம் ஆண்டுக்கு சுமார் 85 மில்லியன் திர்ஹம்ஸ் கூடுதல் வருவாயை உருவாக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து துபாய் டாக்ஸி கம்பெனியின் CEO மன்சூர் ரஹ்மா அல்பலாசி கூறுகையில், இந்த நடவடிக்கையானது துபாயிலும் பிராந்தியத்திலும் DTCயின் சேவைகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஸ்மார்ட் மற்றும் நிலையான போக்குவரத்துத் துறையில் முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டுறவை வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசிய போது, இந்த விரிவாக்கம் டாக்சிகள், லிமோசின்கள், பேருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட வாகனங்களைக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இது விரிவான போக்குவரத்து தீர்வுகளின் முன்னணி வழங்குநராக DTC இன் நிலையை ஆதரிப்பதுடன், வணிகத்தின் வருவாய் வளர்ச்சி மற்றும் லாபத்திற்கு பங்களிக்கும் என்றும் அல்ஃபாலாசி தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel