துபாயின் பொது பார்க்கிங் ஆபரேட்டரான பார்க்கின் (parkin) நிறுவனம், துபாயின் பழமையான மாவட்டங்களில் ஒன்றான தேராவின் அல் சப்கா பகுதியில், 350 பார்க்கிங் இடங்களுடன் கூடிய புதிய ஏழு அடுக்கு மாடிகள் கொண்ட தடையில்லா ஸ்மார்ட் பார்க்கிங் வசதி கட்டப்படும் என்று நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பார்க்கின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், எப்போதும் பரப்பாக இருக்கும் தேரா மாவட்டத்தில் புதிய பல மாடி கார் நிறுத்துமிடத்தை அமைப்பதற்காக துபாய் எண்டோவ்மென்ட்ஸ் மற்றும் மைனர்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை – அவ்காஃப் துபாய் (Awqaf Dubai) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், புதிதாக கட்டப்படவிருக்கும் இந்த புதிய பார்க்கிங் வசதி சுமார் 175,000 சதுர அடி பரப்பளவில் இருக்கும் என்றும், இதன் 9,600 சதுர அடிகள் கொண்ட தரை தளமானது சில்லறை விற்பனைக்கு அர்ப்பணிக்கப்படும் என்பதால், இது பார்கினுக்கு கூடுதல் வருவாயை ஈட்டும் என்றும் அந்நிறுவனம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
இந்த புதிய திட்டம் 25 ஆண்டுகளுக்குள் அவ்காஃப் துபாய்க்கு 200 மில்லியன் திர்ஹம் வருவாயை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பார்கின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அவ்காஃப் துபாய்க்கு நிதி ஆதரவை வழங்குவதுடன், தடையற்ற ஸ்மார்ட் பார்க்கிங் வசதியை நிர்வகிக்கவும், இயக்கவும் மற்றும் பராமரிக்கவும் பார்கின் அதன் சந்தை-முன்னணி நிபுணத்துவத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று கூறப்படுகிறது.
மேலும், 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்த புதிய ஏழு மாடி பாரக்கிங் கட்டிடத்தின் கட்டுமானம் தொடங்கும் என்றும், கட்டுமான காலம் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் பார்கின் நிறுவனம் கூறியுள்ளது. இந்த பார்க்கிங் வசதி பயன்பாட்டிற்கு வரும் போது தேராவில் பார்க்கிங் இடங்களுக்கான தேவை கணிசமாக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel