நாளை (ஜூலை 25, 2025) முதல், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வங்கிகள் ஆன்லைன் மற்றும் நிதி பரிவர்த்தனைகளுக்காக SMS மற்றும் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்படும் ஒரு முறை கடவுச்சொற்களை (OTPகள்) படிப்படியாக நிறுத்தத் தொடங்கும் என்று அமீரகத்தின் அரபு நாளிதழான எமரத் அல் யூம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு பதிலாக, வாடிக்கையாளர்கள் இனி வரும் நாட்களில் தங்கள் வங்கியின் உள்ளமைக்கப்பட்ட சரிபார்ப்பு அம்சங்களைப் (in-app confirmation feature) பயன்படுத்தி மொபைல் செயலி மூலம் OTP இல்லாமல் நேரடியாக பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிகிறது.
இந்த மாற்றம் உள்ளூர் மற்றும் சர்வதேச பரிமாற்றங்களுக்கும், பிற டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கும் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு UAE மத்திய வங்கியின் வழிகாட்டுதலின் கீழ் வருவதாகவும், மேலும் இது படிப்படியாக அனைத்து வங்கிகள் மூலமாக வெளியிடப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றம் பாதுகாப்பை மேம்படுத்துவதும், SMS மற்றும் மின்னஞ்சல் அடிப்படையிலான OTPகளுடன் நிகழக்கூடிய மோசடிக்கான வாய்ப்புகளைக் குறைப்பதும் முக்கிய நோக்கமாகும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி செயலிகளைப் புதுப்பிக்கவும், டிஜிட்டல் சேவைகளை சீராகப் பயன்படுத்துவதற்கு மொபைல் ஆப்பில் அங்கீகாரம் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel