அமீரகத்தைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் உங்கள் கனவு வேலைவாய்ப்பைப் பெறுகிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். புதிய வேலையில் சேருவதற்காக தற்போதைய வேலையை ராஜினாமா செய்கிறீர்கள். மேலும் உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்குத் தயாராகத் தொடங்குகிறீர்கள். ஆனால், புதிய முதலாளி திடீரென்று ஜாப் ஆஃபரை திரும்பப் பெறுகிறார். இத்தகைய சூழலில் ஊழியருக்கு என்ன நடக்கும்? ஏதேனும் சட்டப் பாதுகாப்பு உள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். இந்த நிச்சயமற்ற நிலையில் இருக்கும் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது பற்றி இங்கே காணலாம்.
ஊழியர்களுக்கு வழங்கப்படும் கையொப்பமிடப்பட்ட ஆஃபர் லெட்டர் ஒரு உறுதிமொழியாகத் தோன்றலாம், ஆனால் அது மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகத்தால் (MoHRE) அங்கீகரிக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தத்திற்கு (employment contract) வழிவகுக்கும் வரை அது எப்போதும் சட்டப்பூர்வ ஒப்பந்தமாகாது என்று வேலைவாய்ப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே, வருங்கால முதலாளி பின்னர் வேலைக்கான சலுகையை (job offer) நிராகரித்தால், தற்போதைய பதவியை ராஜினாமா செய்வது ஆபத்தானது.
ஆஃபர் லெட்டர் மற்றும் வேலைவாய்ப்பு ஒப்பந்தம்
2022 ஆம் ஆண்டின் அமைச்சர் ஆணை எண். 46 இன் கீழ், முதலாளிகள் சம்பளம், ஜாப் ஆஃபர்ஸ் மற்றும் பிற விதிமுறைகளை கோடிட்டுக் காட்டும் MoHRE-அங்கீகரிக்கப்பட்ட ஆஃபர் லெட்டரை வழங்க வேண்டும். பின்னர் அதே விதிமுறைகள், தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் இல்லாமல் பணி அனுமதி விண்ணப்பத்துடன் வரும் நிலையான MoHRE வேலைவாய்ப்பு ஒப்பந்தத்திற்கு (employment contract) மாற்றப்பட வேண்டும். MoHRE பணி அனுமதி மற்றும் ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் போது மட்டுமே முதலாளியும் தொழிலாளரும் UAE தொழிலாளர் சட்டத்தின் கீழ் வருவார்கள்.
- MoHRE பணி அனுமதி வழங்குவதற்கு முன்பு ஆஃபர் திரும்பப் பெறப்பட்டால், ஊழியர் அமீரக தொழிலாளர் விதிமுறைகளுக்கு உட்பட்டவர் அல்ல.
- MoHRE பொதுவாக பதிவு செய்யப்படாத ஜாப் ஆஃபர் தொடர்பான தொழிலாளர் புகார்களை ஏற்காது.
மேலும், 2022 ஆம் ஆண்டின் நிர்வாகத் தீர்மானம் எண். 38, அனைத்து ஆஃபர் லெட்டர்களும் MoHRE இன் மின்னணு வடிவத்தைப் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. ஒரு ஊழியருக்கு வழங்கப்பட்ட ஆவணம் அந்த முறையுடன் பொருந்தவில்லை என்றால், MoHRE அதை அதிகாரப்பூர்வமற்றதாகக் கருதலாம். எனவே, வருங்கால ஊழியர்கள் தங்கள் தற்போதைய பதவிகளில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பு MoHRE உடன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க வேண்டும்.
சிவில் நடவடிக்கை
ஒரு ஊழியர் புதிய வேலை வாய்ப்பை நம்பி தற்போதைய வேலையை ராஜினாமா செய்து நிதி இழப்பைச் சந்தித்த பிறகு ஒரு நிறுவனம் ஆஃபரை ரத்து செய்தால், பாதிக்கப்பட்ட தரப்பினர் நஷ்டஈடு கோர சிவில் வழக்கைத் தாக்கல் செய்யலாம். நீதிமன்றங்கள் ஆஃபர் லெட்டரை நோக்கத்திற்கான சான்றாகக் கருதலாம், ஆனால் சட்டத்தில் பணி ஒப்பந்தம் இருந்ததா என்பதை ஆராய்வார்கள். அத்தகைய வழக்குகளில் அளவிடக்கூடிய இழப்பை நிரூபிப்பதையும், முதலாளி நல்லெண்ணத்தில் செயல்படத் தவறியதையும் பொறுத்தே வெற்றி கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வேலை தேடுபவர்களுக்கான நடைமுறை ஆலோசனை
- MoHRE-வடிவமைக்கப்பட்ட ஆஃபர் லெட்டரை கேட்டு, முதலாளி பணி அனுமதி விண்ணப்பத்தைத் தொடர்கிறார் என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்கள் புதிய பணி அனுமதிக்கு MoHRE ஒப்புதல் பெறும் வரை உங்கள் தற்போதைய பணியிலிருந்து முறையாக ராஜினாமா செய்ய வேண்டாம்.
- சிவில் நடவடிக்கை தேவைப்பட்டால் அனைத்து மின்னஞ்சல் உரையாடல் மற்றும் ஆவணங்களையும் வைத்திருங்கள்.
- வழக்கு சார்ந்த வழிகாட்டுதலுக்கு MoHRE அல்லது தகுதிவாய்ந்த அமீரக வேலைவாய்ப்பு வழக்கறிஞரை அணுகவும்.
முறைசாரா வேலைவாய்ப்பு சலுகைக்கும் சட்டப்பூர்வமாக பிணைக்கும் ஒப்பந்தத்திற்கும் இடையில் உள்ள நுண்ணிய வித்தியாசங்களை புரிந்து கொள்வதன் மூலம், வேலை தேடுபவர்கள் திடீர் வேலைவாய்ப்பு ரத்துகளிலிருந்தும் அதைத் தொடர்ந்து வரும் நிதி அபாயங்களிலிருந்தும் தங்களை சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel