அமீரகவாசிகள் கடந்த ஒரு சில தினங்களாக இணைய சேவையில் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். செங்கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் மூன்றாவது நாளாக இணைய இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கான பழுதுபார்ப்பு முடிவடைய வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து தெரிவிக்கையில் “உலகளவில், ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டுமே இதுபோன்ற கேபிள்களை சரிசெய்யும் திறன் உள்ளது,” என்றும், “அவை கடலுக்கு அடியில் ஆழமாக புதைக்கப்பட்டுள்ளன, மேலும் சரியான சேதத்தைக் கண்டுபிடித்து சரிசெய்ய மிகவும் திறமையான ஃபைபர் டைவர்ஸ் தேவை. இது விரைவாகச் செய்ய முடியாத ஒரு சிக்கலான செயல்.” என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.
நிபுணர்களின் கூற்றுப்படி, காத்திருப்பு நீண்டதாக இருக்கலாம் என்றாலும், சேதமடைந்த பகுதிகளை புதிய கேபிள்களால் மாற்றுவது அவற்றின் நீண்ட ஆயுளை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன. புதிய பொருட்கள் வலிமையானவை மற்றும் சிதைவு அல்லது சேதத்திற்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டவை, இது சிறந்த நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.” என்று அவர்கள் எடுத்துரைத்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் அவதி!!
இந்த இடையூறு ஏற்கனவே குடியிருப்பாளர்களுக்கு அன்றாட சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. குடியிருப்பாளர் ஒருவர் கூகிள் மேப்ஸ் உதவியுடன் அபுதாபியின் புறநகர்ப் பகுதிகளுக்கு வாகனம் ஓட்டும்போது திடீரென இன்டர்நெட் வேகம் குறைந்ததால், 1.5 மணிநேரம் எடுத்திருக்க வேண்டிய நேரம், இறுதியில் 2.5 மணிநேரத்திற்கு மேல் ஆனதாக வேதனை தெரிவித்துள்ளார். மற்றொரு குடியிருப்பாளர், ஒரு வேலை நிகழ்வின் போது மொபைல் டேட்டாவைப் பயன்படுத்த முடியாமல் போனதாகவும், அதிர்ஷ்டவசமாக அந்த இடத்தில் வைஃபை இருந்ததாகவும் கூறியுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் 7 ஆம் தேதி, தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களான Du மற்றும் e& UAE இரண்டும் டேட்டா சேவைகளில் மந்த நிலை இருக்கும் என்று வாடிக்கையாளர்களை எச்சரித்து, இந்த சிக்கலைத் தீர்க்க தங்கள் குழுக்கள் சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றன என்பதையும் அவை உறுதிப்படுத்தின.
கேபிள் துண்டிக்கப்பட்டதற்கான காரணம் விசாரணையில் உள்ளது, ஆனால் நிபுணர்களின் கூற்றுப்படி, இடையூறு ஏற்பட்டிருக்க பல காரணங்கள் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. “கடந்த காலங்களில், நங்கூரம் போடும் கப்பல்கள் தற்செயலாக கேபிள்களை சேதப்படுத்தியுள்ளன. இயற்கை பேரழிவுகளும் ஒரு பங்கை வகிக்கலாம். அரிதான சந்தர்ப்பங்களில், ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது நார்வே அருகே காணப்பட்ட இடையூறுகள் போன்ற தீங்கிழைக்கும் சம்பவங்கள் நடந்திருக்கலாம்” என்று சிஸ்கோவின் சொல்யூஷன்ஸ் ஆர்கிடெக்ட் ஸ்வப்னெண்டு எம் சாத்தியமான சூழ்நிலைகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
மேலும், இந்த கேபிள்கள் பல நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படும் முக்கியமான உள்கட்டமைப்புகள், குறிப்பாக ஐரோப்பாவுடன் நேரடியாக இணைக்கும் செங்கடல் போன்ற பாதைகளில் என்றும் அவர் வலியுறுத்தினார். சிங்கப்பூர்-இந்தியா பாதை போன்ற மாற்றுப் பாதைகள் சில சமயங்களில் உதவினாலும், அவை இடையூறுகளை முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் கூற்றுப்படி, சிக்கலான கடலுக்கடியில் பழுதுபார்க்கும் செயல்பாடு முடியும் வரை , இப்போதைக்கு, ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பாளர்கள் மெதுவான இணைய வேகத்திற்கு தயாராக இருக்க வேண்டியிருக்கலாம் என கூறப்படுகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel