அபுதாபி மற்றும் துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் இன்று (நவம்பர் 19) நாட்டின் பல பகுதிகளில் அடர்ந்த மூடுபனியை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை, மதினத் சையத், அல் கிதாய்ரா, உம் அல் அஷ்தான், அல் குவைஃபத், காஸ்யோரா மற்றும் அல் தஃப்ரா உள்ளிட்ட பல பகுதிகளில் அடர்ந்த மூடுபனி பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. அத்துடன் ஜெபல் அலி மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (DIP) உள்ளிட்ட துபாயின் மேற்குப் பகுதிகளிலும் மூடுபனி பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூடுபனியை கருத்தில் கொண்டு, அபுதாபி காவல்துறை ஒரு பாதுகாப்பு நினைவூட்டலை வெளியிட்டது, அதில் கூறப்பட்டுள்ளதாவது: “மூடுபனி காலங்களில், அபுதாபி சாலைகளில் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகக் குறைக்கப்படுகிறது. வாகன ஓட்டிகள் தங்கள் பாதுகாப்பு மற்றும் பிற சாலை பயனர்களின் பாதுகாப்பிற்காக இந்த வரம்பைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.
குளிர்ந்த வானிலை
ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிர்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, அல் அய்னின் ரக்னா பகுதியில் இன்று நாட்டில் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. NCM வெளியிட்ட அறிக்கையின் படி, உள்ளூர் நேரப்படி காலை 6:45 மணிக்கு ரக்னாவில் 9.2°C பதிவானதாக NCM தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், இந்த வார தொடக்கத்தில் நகரம் அதிகபட்ச வெப்பநிலை ஒன்றை அனுபவித்துள்ளது. நேற்றைய தினம் (நவம்பர் 18) அல் அய்னில் உள்ள ஸ்வீஹானில் பிற்பகல் 2:15 மணிக்கு 34.7°C பதிவானது என கூறப்படுகிறது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
NCM வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி, சில நேரங்களில் லேசானது முதல் மிதமான காற்று தூசியுடன் வீசும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெளியே செல்லும் போது கவனமாக இருக்குமாறு குடியிருப்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 26 முதல் 30°C வரை இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 17 முதல் 22°C வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடலோரப் பகுதிகளில், சராசரி வெப்பநிலை 29 முதல் 33°C வரையிலும், மலைப் பகுதிகளில் 19 முதல் 23°C வரையிலும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் 70 முதல் 90 சதவீதம் வரையிலும், மலைப் பகுதிகளில் 45 முதல் 65 சதவீதம் வரையிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு மற்றும் வியாழக்கிழமை காலை நேரங்களில், குறிப்பாக கடலோர மற்றும் உள் பகுதிகளில் ஈரப்பதம் அதிகரிக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel