குடியிருப்பாளர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் இந்த நவம்பரில் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், செயல்பாடுகளின் பட்டியலில் ‘துபாய் யோகா’ ஒரு புதிய நிகழ்வாக சேர்க்கப்பட்டுள்ளது. துபாய் எமிரேட்டின் சின்னமான துபாய் ஃபிரேம் பின்னணியில் நடைபெறும் இந்த யோகா நிகழ்வுக்கான பதிவுகள் இப்போது அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 30, 2025 அன்று ஜபீல் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வு, ஒரு மாத கால 30×30 உடற்பயிற்சி முயற்சியின் பிரமாண்டமான இறுதி நிகழ்வாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த யோகா நிகழ்வு அனைத்து வயது மற்றும் உடற்பயிற்சி நிலைகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும் மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களும் இலவசமாக பங்கேற்கலாம் என்பது சிறப்பிற்குரியது, எனவே, ஆயிரக்கணக்கானோர் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பங்கேற்பாளர்கள் வசதியான ஆடைகளை அணிந்து தண்ணீர் பாட்டில்களை கொண்டு வர ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மேலும், மாற்றுத்திறனாளி மக்கள் மற்றும் குடும்பங்களுக்கு பிரத்யேக மண்டலங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இது அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் ஏற்ற வசதியை உறுதி செய்கிறது. பதிவுகள் இப்போது www.dubaiyoga.ae இல் திறக்கப்பட்டுள்ளன, ஆர்வமுள்ளவர்கள் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel